வேலூர் மாவட்டத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை அரசியல் கட்சி பிரமுகர் சாலையில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் திட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அரசியல் கட்சி பிரமுகர் பேசியதாவது, பெண்களிடம் ஃசெல்போன் எண்களை வாங்கி ஆபாச வீடியோக்கள் அனுப்புகிறாயா ? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இதுபோன்று வேலை பார்ப்பது சரியா ? என்று உதவி ஆய்வாளரை பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இந்த வீடியோ குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில் வரும் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் வேலூர் மாநகர போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் ராஜமாணிக்கம் என்பது தெரிய வந்துள்ளது.
இவர் வாகன தணிக்கை என்ற பெயரில் இருசக்கர வாகனத்தில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து ஃசெல்போன் எண்களை வாங்கி வைத்துக் கொண்டு நள்ளிரவில் அவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பியதாகவும், இதுகுறித்து யாரிடமும் எதுவும் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின் ஃசெல்போன் எண்ணுக்கு ராஜமாணிக்கம் ஆபாசமாக வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த பெண் இது குறித்து தனது உறவினரான அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகி பாலாஜியிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பாலாஜி நேற்று வேலூரில் பணியில் இருந்த ராஜமாணிக்கத்திடம் ஆபாச வீடியோ தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அவர் என்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி சரமாரியாக திட்டினார்.
அதன்பின், ராஜமாணிக்கம், அண்ணா என்னை மன்னித்து விடுங்கள் இனிமேல் இதுபோன்று செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் ஃசெல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
தற்போது உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கத்தை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்று ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மாமுல் தர மறுத்த தள்ளுவண்டி கடை மீது தாக்குதல்; ஓய்வுபெற்ற ஆய்வாளர் மீது வழக்கு!