ETV Bharat / state

’அரசு வழங்கும் குறைந்த விலை வெங்காயம் போதுமானதாக இல்லை’

author img

By

Published : Oct 31, 2020, 5:54 PM IST

வேலூர்: தமிழ்நாடு அரசு வழங்கும் குறைந்த விலை வெங்காயம் போதுமானதாக இல்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

onion sale
onion sale

இந்தியாவில் மீண்டும் வெங்காய விலை அதிகரித்தத்தை அடுத்து மாநில அரசுகள் வெங்காய விலையை குறைப்பதற்கும், பதுக்கலை தடுப்பதற்கும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் வெங்காய பதுக்கல்களை குறைக்க தமிழ்நாடு கூட்டுறவு துறையின் மூலம் குறைந்த விலையில் அவற்றை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கு லாரி மூலம் பெரிய வெங்காயம் அனுப்பப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் அக்டோபர் 28ஆம் தேதியன்று 5 ஆயிரத்து 700 கிலோ வெங்காயம் வேலூர் காட்பாடியில் உள்ள நகரமைப்பு கூட்டுறவு பண்டக சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இறக்கப்பட்ட வெங்காயம் அன்று மாலையே காட்பாடி காந்திநகரில் உள்ள பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் விற்பனைக்கு வந்தது. சந்தையில் கிலோ 90 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் அரசின் பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் ஒரு நபருக்கு 2 கிலோ வீதம் 1 கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் காந்தி நகரில் உள்ள பண்ணை பசுமை அங்காடியில் மட்டும் தான் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கே அரசு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலை வெங்காயத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை என வாரத்திற்கு ஆறு நாட்கள்(ஞாயிறு விடுமுறை) இயங்கும் இந்த அங்காடியில் தினமும் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து காவல் துறை பாதுகாப்புடன் வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

இது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது கரோனா காலத்தில் சமூக இடைவெளி இன்றி நீண்ட வரிசையில் காத்திருப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

வெங்காயம் விற்பனை

இது குறித்து சேனூர் கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் கூறுகையில் "இங்கு நபருக்கு இரண்டு கிலோ வெங்காயம் தான் கொடுக்கின்றனர். அதுவும் சிரமத்துடன் வாங்கவேண்டியதாக உள்ளது. தரமான வெங்காயம் தான் என்றாலும் எங்கள் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. மக்கள் வேறு வழியின்றி கிடைப்பதை வாங்கிச் செல்கின்றனர். அரசாங்கம் இன்னும் சற்று கூடுதலாக கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார்.

இதையும் படிங்க:கிலோ வெங்காயம் ரூ.45 - விற்பனையைத் தொடங்கிவைத்த அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.