ETV Bharat / state

நண்பனை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற சக நண்பர்கள் கைது : நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 9:52 PM IST

வேலூர் அருகே, குடிபோதையில் நண்பர்கள் சேர்ந்து சக நண்பரை பீர் பாட்டிலால் தலையில் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

வேலூர்: காட்பாடி அடுத்த கோரப்பட்டரை அருகே சடலம் ஒன்று கிடப்பதாக லத்தேரி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மணல் மேட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் கோரப்பட்டரை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் குணசேகரன் (23) என்பது தெரியவந்தது. பெற்றோர் அளித்த வாக்குமூலத்தின் படி குணசேகரன் கடந்த 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றதும், அன்று இரவு வீட்டிற்கு வராததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குணசேகரன் கொலை செய்யப்பட்ட பகுதிக்கும் அருகே உள்ள குடியிருப்பு, பெட்டிக்கடை உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பின்னர், கொலை நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சாரா, கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து உடலை மோப்பம் செய்து விட்டு அங்கிருந்து தைலம் தோப்பு வழியாக ஓடிச்சென்று, மீண்டும் லத்தேரி பஸ் நிலையத்திற்கு திரும்பியுள்ளது.

இப்படி பல கட்ட விசாரணைக்குப் பிறகு, குணசேகரனின் நண்பர்கள் மீது சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களுடன் தொடர்புடைய சுமார் 17 பேரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான நரேஷ் குமார் (18) மற்றும் பிரதாப் (21)ஆகிய இருவரையும் காவல் துறையினர் பிடித்தனர். அவர்களுடன் கொலை குற்றத்திற்கு துணைபோன குற்றத்திற்காக பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மேலும் 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாடு விடும் திருவிழாவில் மாடு விடுபவர்களான குணசேகரன் மற்றும் நரேஷ் குமார் இடையே வெறுப்புணர்வு இருந்ததாகவும், முன்விரோதம் காரணமாக இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி இரவு வழக்கம்போல், கோரப்பட்டரை சாலை அருகே உள்ள சதீஷ் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடைக்கு சென்று மது அருந்த தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அங்கிருந்த மணல் மேட்டில் குடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது குணசேகரன் மற்றும் நரேஷ் குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நரேஷ் குமார் நண்பர் பிரதாப் குணசேகரனின் கையை கட்டி வாயினை பொத்தியுள்ளார், அதன்பின் நரேஷ் குமார் பீர் பாட்டிலால் குணசேகரனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தனிமையில் ஆபாசப்படங்கள் பார்ப்பது குற்றம் அல்ல: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.