ETV Bharat / state

தலையில் நட்டுடன் தையல் போட்டதால் பரபரப்பு.. அரசு மருத்துவரின் அலட்சியமே என குற்றச்சாட்டு

author img

By

Published : Jun 6, 2023, 7:43 AM IST

Updated : Jun 6, 2023, 12:02 PM IST

லாரி விபத்தில் காயமடைந்த நபரின் தலையில் இருந்த நட்டுடன் தையல் போட்டதாக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Vellore
வேலூர்

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (45). இவர் நேற்று காலை சுமார் 5 மணியளவில் மாதனூர் அருகே லாரி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக லாரியில் மோதி உள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்ட நிலையிலும் ரத்தம் வழிவது நிற்காமல் இருந்துள்ளது. மேலும், தலையில் கடுமையான வலியும் இருந்துள்ளது.

இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் கார்த்திகேயனை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரது தலையை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். அதாவது, ஸ்கேன் செய்து பார்த்ததில் கார்த்திகேயனின் தலையில் தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு ‘நட்டு’ ஒன்று இருப்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், கார்த்திகேயனின் தலையில் போடப்பட்ட தையல் பிரிக்கப்பட்டு அந்த இரும்பு நட்டை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். மேலும், தொற்று காரணமாக அவருக்கு 2 நாட்கள் கழித்தே மீண்டும் அந்த இடத்தில் தையல் போட முடியும் என்று மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், இது குறித்து கார்த்திகேயனின் உறவினர்கள் கூறுகையில், "விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் காலை 8 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். அப்போது வரை அவருக்கு எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்கவில்லை. அங்கிருந்த செவிலியர்களிடம் கேட்டதற்கு சுய நினைவுடன் நன்றாகத்தான் இருக்கிறார் என்று கூறி எரிச்சல் அடையச் செய்தனர்.

அதன் பிறகு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில், நாங்கள் சத்தம் போட்டதும் உடனடியாக தலையில் தையல் போட்டு சாதாரண வார்டுக்கு மாற்றினர். ஆனால், தையல் போட்ட இடத்தில் இருந்து ரத்தம் வழிவது நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறினோம். அதற்கு அங்கிருந்த செவிலியர்கள் டாக்டரிடம் பேசிய பின்னர் நீங்கள் செல்லலாம் என்று கூறி அனுப்பி விட்டனர்.

அதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைக்கு வந்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்தபோது, தலையில் நட்டு இருப்பதை தெரிவித்து அகற்றினார்கள். தற்போது அரசு மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததுடன், தலையில் நட்டுடன் வைத்து தையல் போட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாப்பாத்தியிடம் கேட்டதற்கு, "அது தொடர்பான புகார் எதுவும் இதுவரை என்னிடம் வரவில்லை. அந்த சம்பவம் குறித்து விசாரித்து பதில் அளிக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: போக்கிரி பட பாணியில் அத்துமீறல்.. இன்ஸ்பெக்டர் மீது திருச்சி கலெக்டரிடம் இளம்பெண் புகார்

Last Updated :Jun 6, 2023, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.