வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தனியார் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் உள்ள தோல் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியினை சுத்தம் செய்யும் பணியில் வேலூர் சதுப்பேரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் (வயது 35), வீசி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா(வயது 47), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 40) மற்றும் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (வயது 33) ஆகிய 4 ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது திடீரென விஷவாயு தாக்கி விபத்துக்குள்ளானது. இதில் தமிழ்ச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். ராஜா, மகேந்திரன், ராமதாஸ் ஆகிய மூவரும் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் பலியான இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா? - அமைச்சர் எ.வ.வேலு கேள்வி