ETV Bharat / state

காவிரி விவகாரம்; காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் கடை அடைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 2:15 PM IST

Cauvery issue: காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கர்நாடகா மற்றும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

cauvery issue
காவிரி விவகாரம்

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சியில் கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டம்

திருச்சி: காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பின் திறக்கப்படும் குறைந்த நீரைக் கூட தடுக்கும் கர்நாடக அரசு மற்றும் பாஜக, பிற அமைப்புகளைக் கண்டித்தும், தமிழகத்திற்கு காவேரி தண்ணீர் திறந்து விடக் கூடாது. மேலும், பல்வேறு கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தி வருவதைக் கண்டித்தும், தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியும், தமிழக விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத மத்திய பாஜக அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகின்றன.

அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டம் முழுவதும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றன. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக சார்பில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவா, மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜா, மனிதநேய மக்கள் கட்சி ராஜா, முகமது அஷ்ரப், தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்டத் தலைவர் அயிலை சிவசூரியன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் செழியன், சமூக நீதிப் பேரவை நிர்வாகி ரவிக்குமார் உள்பட 1,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியில் இருந்து கலந்து கொண்டனர்.

பின்னர், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்; அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.