ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

author img

By

Published : Aug 10, 2023, 10:11 AM IST

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த பயணி உடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ. 23 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

foreign currency seized
வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையம், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த படியாக 2-வது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) காலை மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது வழக்கம் போல விமான நிலைய மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது, திருச்சியை சேர்ந்த ராம்பிரபு என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பயணியை, விமான நிலைய மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில், பயணி ராம்பிரபு தனது உடல், உள்ளாடை, மொபைல், பர்ஸ் மற்றும் கால் பாதத்திற்கு அடியில் என மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் சவுதி ரியால் இருந்தது தெரிய வந்தது. அதாவது அதன் இந்திய மதிப்பு ரூ.23 லட்சத்து 11 ஆயிரம் ஆகும். பின்னர் அந்த பயணியை அதிகாரிகள் விசாரித்த போது, சவூதி ரியாலை சட்ட விரோதமாக மலேசியாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் எந்த நோக்கத்திற்காக கரன்சி நோட்டுகளை சட்ட விரோதமாக கடத்தி செல்கிறார். அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா, வேறு வழக்குகள் எதுவும் இவர் மீது நிலுவையில் உள்ளதா? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாகவே திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள் போன்ற அரிய வகை உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது. அதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும், பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது இனி வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: "குழந்தை எப்படி சிகப்பாக பிறக்கும்?" - காதல் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.