ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

author img

By

Published : May 31, 2023, 1:25 PM IST

திருச்சி விமான நிலையத்தில், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Foreign currency notes worth Rs 37 lakh seized at Trichy airport
திருச்சி விமான நிலையத்தில் ரூ 37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல்

திருச்சி: துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ உலகின் பல்வேறு முக்கிய நாடுகளுக்கு, திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள், தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகள் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

நேற்று‌ (மே 30) திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. சார்ஜா செல்ல இருந்த விமானத்தில், கரன்சி நோட்டுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக, விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் அடிப்படையில், விமானத்தில் இருந்த பயணிகள் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது 3 ஆண் பயணிகள் மறைத்து வைத்து எடுத்து வந்த அமெரிக்க டாலர், சவுதி ரியால் மற்றும் யுஏஇ திர்காம்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கரன்சி நோட்டுகள் சிக்கியது. இந்த கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கரன்சி நோட்டுகள் ஆய்வு செய்ததில், இதன் இந்திய ரூபாய் மதிப்பு 37 லட்சத்து 93 ஆயிரத்து 845 என தெரிய வந்தது. வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து‌ வந்த 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரன்சி கடத்தலில் பிடிபட்ட நபர்கள், இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா ? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் அவர்கள் மீது உள்ளதா? இவர்களுக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள்? எந்த நோக்கத்திற்காக கரன்சி நோட்டுகளை கடத்தி செல்கின்றனர் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து திருச்சி சர்வதேச விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், அந்த பயணிகளை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

ஆகவே, கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள், கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, வருங்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: ஐஸ் கட்டியில் டைவ்.. புதிய உலக சாதனை.. அசத்திய திருச்சி பள்ளி மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.