தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்கள் பதவி காலம் முடிவடைய உள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், அதிமுகவின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார், நவநீத கிருஷ்ணன் ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது. இதனையடுத்து ஜூன் மாதம் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலத்தைப் பொறுத்து ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 அல்லது 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற அடிப்படையிலும், திமுகவுக்கு 4 எம்.பிக்கள் பதவி கிடைப்பது உறுதி. அதிமுகவுக்கு 2 இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறை பதவியில் இருந்து விலகும் திமுகவின் 3 எம்.பிக்களுமே மீண்டும் சீட் பெறுவதற்கு மும்முரமாக உள்ளனர்.
இது போதாது என்று திமுகவிடம் எப்பாடியாவது ஒரு சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருக்கிறதாம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி, இம்முறை எப்படியாவது எம்பியாவது என தீவிரமாக இருக்கிறாராம். இதனால் திமுகவுக்கு அதிதீவிரமான ஆதரவை வெளிப்படுத்தி போராட்டங்களை முன்னெடுக்கிறார்.
இன்னொரு பக்கம் மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யான மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. ப.சிதம்பரத்துக்காகவும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் அதிமுகவில் இப்போதைக்கு சீனியர்களாக இருக்கும் மாஜி அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா என சிலர் எப்படியாவது ராஜ்யசபா எம்.பி.யாகிவிட படுதீவிரமாக முயற்சிக்கின்றனராம்.
தமிழ்நாட்டில் மே மாதம் வெயில் காலம் முடிவடைந்தாலும் ஜூன் மாதமும் ராஜ்யசபா தேர்தல் காரணமாக சூடு பறக்கும் என்றே சொல்லப்படுகிறது. உடன்பிறப்புக்களிடம் பேச்சு கொடுத்தால் அவர்கள் சொல்லும் கதை கண்ணைக் கட்டுகிறது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி அரசியல் அரங்கில் வெளிச்சத்திற்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காட்டை சேர்ந்தவர். அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி மருத்துவர் மட்டுமல்ல, எழுத்தாளரும்கூட. 'நேசம் விரும்பும் நெருப்பு பூக்கள்', 'புனித வள்ளலாரின் புரட்சிப்பாதை', 'எனது அம்பறாத் தூணியிலிருந்து' என பல நூல்களை எழுதியிருக்கிறார்.
இவர் எழுதிய வள்ளலாரும் பெரியாரும்' எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. அதோடு திராவிடக் கொள்கையில் பிடிப்பு கொண்டவர். இந்த ராஜ்யசபா தேர்வு மூலம் அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான அஸ்திவாரம் உருவாக்கப்படுகிறது என்றும் சொல்கின்றனர் உடன்பிறப்புக்கள்.
திமுக நான்கு எம்பிக்களில் ஒன்றாக? அல்லது கூட்டணிக்கு ஒன்று போக மூன்றில் ஒன்றா என்பது தான் இப்போதைய விவாதம். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.