ETV Bharat / state

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கயா.. கிரைண்டர் மிஷினில் வைத்து தங்கம் கடத்தல்.. திருச்சியில் நடந்தது என்ன?

author img

By

Published : May 25, 2023, 10:56 AM IST

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கிரைண்டர் மிஷினில் மறைத்து வைத்து கடத்தி எடுத்துவரப்பட்ட ரூ.21 லட்சத்து 27 ஆயிரத்து 672 மதிப்புள்ள 348 கிராம் தங்கம் மற்றும் கழிவறையில் கிடந்த ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 586 மதிப்புள்ள 49 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கிரைண்டர் மிஷினில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கிரைண்டர் மிஷினில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ நாடுகளுக்குத் தினசரி விமானச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி கொண்டே வருகிறது. திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது.

விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விமானத்திலிருந்து வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் ஆண் பயணி நூதன முறையில் கிரைண்டர் மிஷினில் (hand mixer) மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட ரூபாய் 21 லட்சத்து 27 ஆயிரத்து 672 மதிப்பு உள்ள 348 கிராம் எடை மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது. தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல் விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 586 மதிப்பு உள்ள 49 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து அதைக் கழிவறையில் வீசி சென்ற நபர் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் கடத்தலில் பிடிபட்ட நபர் இதற்கு முன்பு தங்கம் கடத்தலில் ஈடுபட்டு உள்ளனரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் ஏதும் அவர்கள் மீது உள்ளதா? இவர்களுக்குப் பின்புலமாக யார் செயல்படுகிறார்கள்? எந்த நோக்கத்திற்காகத் தங்கம் கடத்தி வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

இதனை அடுத்து விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், அந்த பயணிகளை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சமீப காலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: காரை 17 கி.மீ தள்ளிச் சென்ற திருடர்கள் - சுவாரசிய பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.