சென்னை அடுத்துள்ள ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட கரோனா சோதனை மையத்தை அமைச்சர் பாண்டியராஜன் இன்று திறந்துவைத்தார்.
பின்னர் மருத்துவத் துறை அலுவலர்களுடன் கரோனா மைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, சில ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் ஆரம்பத்திலேயே வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு. எனினும் ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் கூறியதை அடுத்து மாணவர்களை அதற்காக தயார் படுத்தும் பணிகளை அரசு செய்தது.
நீட் தேர்விற்கு வித்திட்டதே திமுக, காங்கிரஸ் கூட்டணியிலான மத்திய அரசு தான்.
தமிழ்நாட்டில்தான் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் நீட்தேர்வில் பங்கு பெறுகின்றனர். நீட் தேர்விற்கு பயந்தவர்கள் தமிழக மாணவர்கள் இல்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேவையின்றி மாணவர்களை குழப்பி வருகிறார். கனவில் கோட்டை கட்டி அதில் வாழ்ந்து வருவது ஒருவிதமான நோய் இதற்கு அவர் விரைவில் மருத்துவரை பார்க்க வேண்டும். மீண்டும் அதிமுகதான் ஆட்சியை பிடிக்கும்" என தெரிவித்தார்.