ETV Bharat / state

ஸ்டெர்லைட் வழக்கும், தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களும்!

author img

By

Published : Aug 18, 2020, 9:38 PM IST

சென்னை : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டுமென தமிழ்நாடு அரசு விதித்த உத்தரவு நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

நச்சு ஆலை ஸ்டெர்லைட் வழக்கும், தீர்ப்பின்  சில முக்கிய அம்சங்களும்
நச்சு ஆலை ஸ்டெர்லைட் வழக்கும், தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களும்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு 815 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுமென நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஸ்டெர்லைட் வழக்கும், தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களும்...

அபாயகரமான கழிவு குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாததால் இது நிச்சயமாக சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதே உண்மை.

மாநில அரசின் கழிவு மேலாண்மைக்கு போதிய வசதிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்படுத்தவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை முறையாக கண்காணிக்க தவறியது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தவறே.

ஆலையை பராமரிக்க மேற்கொண்டுள்ளதான ஸ்டெர்லைட்டின் நடவடிக்கைகள் கதை நம்பும்படியாக இல்லை.ஸ்டெர்லைட் ஆலையால் அதை சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை பாதிப்பு உள்ளிட்ட உடல்நில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி 80,725 பேரிடம் நடத்திய ஆய்வில் மற்ற பகுதியில் வசிப்பவர்களை விட 1000 மடங்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள மக்களின் உடல்நலத்தை ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவின் தாமிர தேவையை பூர்த்தி செய்ய முடியாது, பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆலை நிர்வாகத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதிக அளவில் இயற்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலையினால் கிடைக்கும் பொருளாதார நிலையை விட சுற்றுச்சூழலை பாதுகாப்பதே முக்கியம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மக்களை சமாதானப்படுத்தும் நோக்கிலேயே ஆலை மூடப்பட்டது என்ற ஆலை நிர்வாகத்தின் வாதத்தை ஏற்க முடியாது.

ஒரு நாளைக்கு 1,200 டன் தாமிரம் உற்பத்தி செய்யும் நிலையில் அதன் மூலம் 2400 டன் கழிவு வெளியேற்றப்படுகிறது, இதன் மூலம் ஆண்டுக்கு 8 லட்சம் டன் கழிவு வெளியேற்றப்படுகிறது.

ஸ்டெர்லைட் தரப்பின் வாதங்கள் காகிதத்தில் பார்க்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால், நிஜத்தில் மிக ஆபத்தானவை.

இதுபோன்ற அபாயகரமான தொழிற்சாலையை நிறுவ ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அடிப்படை உரிமையே இல்லை.

அரசியல் காரணங்களுக்காக தான் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என கருத்தில் கொள்ள வேண்டுமானால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆலை நிறுவப்பட்டதும் அரசியல் காரணங்களுக்காகத்தான் என எண்ண தோன்றுகிறது.

அனுமதி அளிக்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அந்நிறுவனம் மீறியுள்ளதன் தாக்கம் சிறிது காலம் கழித்தே தெரிய வரும்.

உள்நோக்கம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

தூத்துக்குடியில் மிகக்பெரிய நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனம், அரசு தங்களை மட்டுமே பழிவாங்குவதாக கூறுவது ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல.

ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சரியே. பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பொறுமையாக வாதாடிய வழக்கறிஞர்கள் முத்துராமலிங்கம், வைகை, யோகேஷ்வரன், பூங்குழலி, அப்துல் சலீம், மாசிலாமணி, சி.எஸ்.வைத்தியநாதன், மோகன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்தது.

ஏற்கனவே மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களில் மக்களின் எதிர்ப்பு காரணமாக ஆலையை அமைக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆலையை மூடிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், அரசாணையை எதிர்த்தும் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.