ETV Bharat / state

ரூ.300 கோடி மோசடி வழக்கு விசாரணையை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்!

author img

By

Published : Sep 14, 2020, 7:21 PM IST

மதுரை: ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடியளவில் மோசடி வழக்கு தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யக்கோரி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.300 கோடி மோசடி : வழக்கு விசாரணையை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்!
ரூ.300 கோடி மோசடி : வழக்கு விசாரணையை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்!

ராமநாதபுரத்தில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நிதி நிறுவனம் தொடர்பாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் சக்கரவர்த்தி உயர் நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"ராமநாதபுரத்தில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்திவந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பு பணம் தருவதாகத் தெரிவித்தனர்.

இதை நம்பி 19.9.2019ஆம் தேதி அன்று ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு உடன்படிக்கை பத்திரம், தேதி குறிப்பிடாமல் ஒரு கோடி மதிப்புள்ள காசோலைகள் தந்தனர். ஒரு ஆண்டுக்கு முடிந்ததும் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளுமாறும் தெரிவித்தனர்.

இதனிடையே, நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர், மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் மோசடி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைதுசெய்தனர்.

தற்போது அந்த இருவரும் நீதிமன்ற பிணையில் வெளிவர முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டால், அவர்கள் வெளிநாடு தப்பிச்செல்லவும் வாய்ப்புள்ளது.

எனவே, நிதி மோசடி செய்த நீதிமணி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், வழக்கு பொருளாதார குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை இனி நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நபர்கள், மோசடி செய்யப்பட்ட பணம் எவ்வளவு? என்பது குறித்து பொருளாதார குற்றவியல் பிரிவு காவல் துறை உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.