உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் ஊராட்சி கவுன்சிலர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. காங்கேயம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் கவுன்சிலர் பதவியேற்பு விழா நடைபெற்றது. மொத்தமுள்ள 11 வார்டுகளில் 5 வார்டுகளில் அதிமுகவும், 4 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 2ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அய்யனார் பதவியேற்று முடிந்ததும், அதிமுகவினரே அவரை இழுத்துச்செல்ல முயன்றனர். அப்போது, சுயேச்சை வேட்பாளர் மகேஷ்கமாரும் அவரது ஆதரவாளர்களும் அய்யானரை தங்கள் பக்கம் இழுக்க ஒன்றிய அலுவலகமே போர்க்களமாக மாறியது.
இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அய்யனாரை காப்பாற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் பாதுகாப்பாக அமர வைத்தனர். இதனைத்தொடர்ந்து அதிமுக, திமுக தொண்டர்களிடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. பின்னர் கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
அதன்பின்னர் கவுன்சிலர் அய்யனார், சுயேச்சை வேட்பாளரான மகேஷ்குமார் ஒன்றியத் தலைவராகதான் ஆதரவு தருவதாகவும் அதனால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் காவலர்களிடம் மனு அளித்தார். இதன்பின்பு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 10 காவலர்கள் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அய்யனார் அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும், ஒன்றியத் தலைவர் தேர்வு நடைபெறும் வரை அய்யனார் வீட்டுக்கு காவலர்கள் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். அதிமுக கவுன்சிலரை கடத்த அதிமுகவினரே முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுயேச்சை வேட்பாளரை கடத்திய திமுகவினர் - காவல் துறையினர் விசாரணை