ETV Bharat / state

'மக்களுடன் முதல்வர்' திட்டம் மக்களுக்கு பயனளிக்காது - பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 4:59 PM IST

Pollachi Jayaraman Byte: திமுக ஆட்சி அமைந்த பின்பு தற்போது வரை எந்த தொகுதியிலும், மக்களின் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாக இந்த விடியா திமுக அரசு அமைந்துள்ளது என முன்னாள் சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்

முன்னாள் சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

திருப்பூர்: அதிமுக சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முன்னாள் சட்டப்பேரவை துணைச் சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி வி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மாநகர மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன் விண்ணப்பப் படிவங்களை ஆய்வு மேற்கொண்டார்.

இதை அடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முன்னாள் சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், “இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று பெட்டி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, ஒரு மாதத்திற்குள் உங்கள் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த திட்டங்களும் செயல்படத்தப்படவில்லை.

மக்களின் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை: அந்த மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. இதுவரை எந்த தொகுதியிலும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோன்று முதலமைச்சரான பிறகு உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் முகவரி திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் என்று மூன்று தலைப்புகளில் பெயர் வைத்து பொதுமக்களை ஏமாற்றி உள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 10 கோரிக்கைகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் மனுவாக அளித்து, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும், தற்போது வரை எந்த ஒரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

மக்களுடன் முதல்வர்: முதலமைச்சரின் முகவரி துறை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த மூன்று திட்டங்களையும் குப்பையில் போட்டுவிட்டு நான்காவதாக ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டமும் சிறிது காலம் செயல்படும். ஆனால், மக்களுக்கு எந்தப் பயனும் இருக்காது. இந்த ஆட்சி அமைந்த பின்பு தற்போது வரை எந்த தொகுதியிலும் புதிய பணிகள் இடம் பெறவில்லை.

கொடூர ஆட்சிக்கு எடுத்துக்காட்டு: மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாக இந்த விடியா திமுக அரசு அமைந்துள்ளது. விரைவில் அவர்களை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள். சென்னையில் அனைத்து பொதுமக்களும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, மின் கட்டணத்தை அறிவித்தது பொதுமக்களின் குரல்வளையை நெருக்குவது, கொடூர ஆட்சிக்கு எடுத்துக்காட்டு. கரோனா காலகட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது போல் மின் கட்டணம் செலுத்துவதற்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

சென்னையில் ஆடம்பர கார் பந்தயத்திற்கு மக்கள் வரிப்பணம் 42 கோடி ரூபாயை வீணடித்துள்ளார்கள். ஆனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைச் சீரமைக்க வெறும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது திமுக அரசின் வேதனைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது” தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூர் நகர காங்கிரஸ் தலைவருக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.