திருப்பூர் மன்னரைப் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்சங்கர் இவரது மனைவி சுபத்ரா. இருவரும் பின்னலாடைத் தொழில் சார்ந்த தையலக கடை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியினர் தொழில் அபிவிருத்திக்காக கடந்த 2018ஆம் ஆண்டில் அக்ஷயா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வேலுச்சாமியிடம் ரூ.12 லட்சம் கடன் வாங்கினர்.
அவர்கள் பெற்ற கடனுக்கு தற்போதுவரை ரூ.16 லட்சம் திருப்பி செலுத்தியுள்ளனர். ஆனால் நிதி நிறுவனத்தினர், தம்பதியர் இதுவரை கட்டிய தொகை முழுவதும் வட்டித்தொகை எனக்கூறி, அசல் தொகையான ரூ. 12 லட்சத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று அவர்களை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் தையலகம் சென்ற நிதி நிறுவனத்தைச் சேர்ந்த வேலுச்சாமி கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசி ஒரே நாளில் பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சுபத்ரா, வேலுச்சாமி மிரட்டும் சிசிடிவி காட்சிகள், செல்பேசியில் பதிவு செய்திருந்த உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் கொண்டு சென்று திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். மேலும் தனது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும் கந்துவட்டி கும்பலிடமிருந்து பாதுகாப்பு வழங்கவும் வேண்டுகோள் விடுத்தார்.