ETV Bharat / state

நிலத்தை அளவீடு செய்ய காலதாமதம்.. வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 10:38 AM IST

Vaniyambadi: வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நிலத்தை அளவீடு செய்ய காலதாமதம் செய்து வருவதாகக் கூறி 2 பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Women dharna in front of Vaniyambadi taluk office
வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கலந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி, லட்சுமி தம்பதி. இவர்களுக்கு சுபாஷ் என்ற மகனும், ரோஸி ரீட்டா என்ற 2 மகள்கள் உள்ளனர். சுபாஷ் திருமணம் முடிந்து சின்ன கல்லுப்பள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதேபோல் இரண்டு பெண் பிள்ளைகளும் திருமணம் முடிந்து சேலத்தில் அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தாய் லட்சுமி, கடந்த 12 வருடத்திற்கு முன்பும், தந்தை ஜோதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காலமாகி உள்ளனர். கலந்ததிரா கிராமத்தில் இவர்களுக்குச் சொந்தமான 57 சென்ட் விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை உள்ளது. அதனை உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகள் ரீட்டா, தங்களுடைய விவசாய நிலம் மற்றும் வீட்டு மனையை அளவீடு செய்து தரக்கோரி ஆன்லைன் மூலம் பதிவு செய்து விட்டு, இது வரையில் 8 முறை சேலத்தில் இருந்து வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவியர் அறைக்கு வந்து சென்றுள்ளதாகத் தெரிகிறது.

அவ்வாறு வரும் போதெல்லாம் அடுத்த வாரம் என்று வாய்தா சொல்லி அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து, தனது குழந்தையுடன் ரோஸி மற்றும் ரீட்டா ஆகிய இரு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், “அனைத்து விதமான ஆவணங்கள் வைத்து இருந்தபோது தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

எங்கள் இடத்தை ஆக்கிரமித்து ஒருவர் வீடு கட்டுகிறார்கள் என்றால், அதனை எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்? பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வீடு கட்டியதற்கு எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். போலீசார் பாதுகாப்புடன் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் மற்றும் வட்டாட்சியர் சாந்தி ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து நிலத்தை அளவீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

இதையும் படிங்க: சென்னை ரயில்வே கோட்டத்தில் அதிரடி டிக்கெட் பரிசோதனை.. ஒரே நாளில் ரூ.20 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.