ETV Bharat / state

திருப்பத்தூரில் 2 தோல் தொழிற்சாலைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

author img

By

Published : Aug 9, 2023, 9:30 AM IST

வாணியம்பாடியில் தோல் கழிவு நீரை கிணறு மற்றும் நிலத்தின் மேல் தேக்கி வைத்திருந்த இரண்டு தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

leather factory
தோல் தொழிற்சாலை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அப்பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீனிவாஸ் அன் கோ மற்றும் சர்பிரஷ் நியாஸ் என்ற இரு தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை, பொது தோல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் தோல் தொழிற்சாலையில் உள்ள கிணற்றிலும், நிலத்திலும் தேக்கி வைத்திருப்பதால், தோல் தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், அதிகாரிகள் ஆய்வு செய்த போது, தோல் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டு வரும் அபாயகரமான பொருட்களை கையாளுவதற்கான உரிமம் பெறவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், நீரை தேக்கி வைத்ததும் கண்டறியப்பட்டது. உடனடியாக, இரண்டு தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலைகளை மூட உத்தரவிடுமாறு மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில், பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தோல் கழிவுநீரினை நிலத்தில் தேக்கி வைத்திருந்த இரண்டு தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து தொழிற்சாலையை மூட உத்தரவிட்டார். அதன்படி, இரண்டு தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தகக்து.

மேலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தோல் கழிவுகளை கிணற்றிலோ அல்லது நிலத்திலோ தேக்கி வைக்கக் கூடாது எனவும், அதை மீறி செயல்பட்டால் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தொழிற்சாலைகளை மூட உத்தரவு பிறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தோல் கழிவுநீரை தொழிற்சாலைகளில் தேக்கி வைத்திருப்பதை பொதுமக்கள் கண்டறிந்தால் உடனடியாக, மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் எண் 8056042227 மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பறக்கும் படை எண் 8056046133 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், தற்போது வரை ஆம்பூர், வாணியம்பாடி, துத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி தோல் கழிவுகளை நிலத்தில் தேக்கி வைத்திருந்த 6க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.