ETV Bharat / state

யார் இந்த குரூஸ் பர்ணாந்து? தூத்துக்குடி நகரத் தந்தைக்கு இன்று மணிமண்டபம் திறப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 7:57 AM IST

Updated : Nov 15, 2023, 9:37 AM IST

Father of Tuticorin City: தூத்துக்குடி நகரத்தின் தந்தையாக போற்றப்படும் குரூஸ் பர்ணாந்து மணி மண்டபத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.15) காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

father of tuticorin City
தூத்துக்குடி நகரத் தந்தை குரூஸ் பர்னாந்தீஸ்


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் தந்தையாக போற்றப்படுபவர், குரூஸ் பர்ணாந்து. இவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 24-ல் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, குரூஸ் பர்ணாந்து பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

பின்னர், தேர்தல் கால கட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், குரூஸ் பர்ணாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், குரூஸ் பர்ணாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அந்த வகையில், தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, கடந்த ஜனவரி 21ஆம் தேதி நடைபெற்றது. ரூ.77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, 376 சதுர அடி பரப்பில் முழு உருவச் சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.11.2023) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.

குரூஸ் பர்ணாந்து வாழ்க்கை வரலாறு: தூத்துக்குடியில் ஜான் சாந்த குரூஸ் பர்ணாந்து தம்பதிகளுக்கு மகனாய் 15.11.1869 ஆம் ஆண்டு குரூஸ் பர்ணாந்து பிறந்தார். தூய சவேரியார் பள்ளியில் கடந்த 1885 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். படிப்பை முடித்தவுடன் வால்காட் கம்பெனியில் கணக்கராக வேலையில் சேர்ந்தார். பின்னர், தொபியால் அம்மாளை மணந்து இல்லறம் நடத்தி, ஏழு குழந்தைகளின் தந்தையானார்.

பின்னர், வால்காட் (Walcott) கம்பெனியிலும், ராலி (Raleigh) கம்பெனியிலும் பணிபுரியும் போது நாட்டின் பிற பகுதிகளில் வந்த பஞ்சு பண்டல் சாம்பிலினைக் காசாக்கிக் கொள்ளாமல் நண்பர் ஏ.எம்.எம் சின்னமணி நாடாரிடம் அனுப்பி வைத்து அவற்றை நூலாக்கி விற்று வரும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவிட்டு வந்தார். பின், செல்விஜர் என்ற ஐரோப்பியரின் நம்பிக்கையைப் பெற்று படிப்படியாக முன்னேறினார்.

இந்த செல்விஜர் என்பவர் தூத்துக்குடி நகர சபையில் ஐரோப்பியரின் பிரதிநிதியாக இருந்தவர். அவருடன் நகர்மன்ற கூட்டங்களுக்கு உதவியாளராக சென்ற குரூஸ் பர்ணாந்து சமூக பணி செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டு மக்களுக்கு நல உதவிகளை செய்தார்.

கல்விக்கு உதவி கேட்டு யார் வந்தாலும் குரூஸ் பர்ணாந்து சீட்டு கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது. அந்த சீட்டு மூலம் சின்னமணி நாடார் உடனே பண உதவி செய்து விடுவார். இந்த பணியில் ஈர்க்கப்பட்ட சின்னமணி நாடார் தாமே கல்வி சேவையில் இறங்கி ஆரம்பித்த பள்ளியும், ஆசிரமமும் தற்போது வ.உ.சி கல்லூரி அருகே சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குரூஸ் பர்ணாந்து ஆற்றிய பணிகள்: கடந்த 1922ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றத்தில் ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பிரதிநிதியாக குரூஸ் பர்ணாந்து இருந்து உள்ளார். பேபி ஹோம் ஆரம்பித்து சுகாதார கட்டமைப்பை உருவாக்கி உள்ளார். கஷ்டப்படுகிறவர்கள் கடன் உதவி பெற கூட்டுறவு சங்கம் ஆரம்பித்து உள்ளார்.

தூத்துக்குடிக்கு குடிநீர் வசதி பெற்றுத் தருவதிலும், தூத்துக்குடியை வெளிநாட்டு நகரங்களுக்கு இணையான நகரமாக உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையில் மட்டுமே உறுதியாக நின்றவர், குரூஸ் பர்ணாந்து. தம் கனவை நிறைவேற்ற, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷ் உடனான நட்பை பயன்படுத்திக் கொண்டார்.

கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து மற்ற இரு நகராட்சிகளும் விலகிக் கொண்டபோது, ஆங்கிலேயர் உதவியுடன் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். இதனால் ஆஷுக்கு நினைவு மண்டபம் அமைக்க நிதி திரட்டி உள்ளார். அப்போது வ.உ.சியின் கப்பல் கம்பெனிக்கு யாரெல்லாம் பணம் கொடுத்திருந்தார்களோ, அவர்களே நினைவு மண்டபம் அமைக்க பணம் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

குரூஸ் பர்ணாந்து வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டு வந்தது, பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது, பொது மயானம் அமைத்தது, நகர சபைக்கு சொந்த கட்டடம் கட்டியது என்று அவர் சாதித்த ஒவ்வொன்றும் பிற நகரங்களுக்கு தூத்துக்குடியை முன்னோடியாக காண்பித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, நகர மக்களின் அடிப்படைத் தேவைகள்தான் முக்கியம் என்று யாருக்கும் பயப்படாமல் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார். மேலும், தூத்துக்குடி நகராட்சித் தலைவராக ஐந்து முறை பதவி வகித்து உள்ளார்.

குரூஸ் பர்ணாந்து மாலை நேரங்களில் தன் குதிரை வண்டியில் நகர்வலம் வந்து, காலரா அபாயம் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறி, குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தி உள்ளார். சுகாதார நிலையத்திற்கு தினமும் சென்று ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயருக்கு மட்டும்தான் இலங்கையில் இருந்து குடிநீர் வர வேண்டுமா? என் நகரத்து மக்களுக்கு நான் தோனியில் குடிநீர் கொண்டு வருவேன் என்று, கடம்பூரில் இருந்து ரயில் மூலமாக குடிநீர் கொண்டு வந்தவர், குரூஸ் பர்ணாந்து.

தூய்மைப் பணியாளர்களை நகருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்தபோது, அதை மறுத்து அவர்களுக்கு நகருக்கு உள்ளேயே குடியிருப்பு வசதி ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார். இஸ்லாமியர்களுக்கு பள்ளிவாசல் கட்ட தன்னுடைய சொந்த நிலத்தையே கொடுத்திருக்கிறார்.

பள்ளிவாசல் டிரஸ்ட் நிர்வாகியாக இஸ்லாமிய அல்லாதவராக நியமிக்கப்பட்ட கவுரவத்தை பெற்று இருக்கிறார். பல்வேறு தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் கடந்து ஊக்கத்துடன் போராடி தன், நகர மக்களுக்கு வசதியான ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்தி தந்துள்ளார்.

இதையும் படிங்க:துர்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கிய அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா!

Last Updated : Nov 15, 2023, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.