ETV Bharat / state

மூக்கை அறுப்பேன் என மிரட்டிய ஆயுள் தண்டனை கைதி; அட்டை கம்பெனி தொழிலாளி தற்கொலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 12:15 PM IST

Thoothukudi Crime: பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி நடராஜன், தன்னிடம் கடன் வாங்கிய அட்டை கம்பெனி தொழிலாளியை மிரட்டியுள்ளார். இந்த நிலையில், தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட அட்டை கம்பெனி தொழிலாளி
தற்கொலை செய்து கொண்ட அட்டை கம்பெனி தொழிலாளி

மூக்கை அறுப்பேன் என மிரட்டிய பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி

தூத்துக்குடி: கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்னகாலனியைச் சேர்ந்தவர், மாடசாமி மகன் கதிரவன் (34). இவர் அப்பகுதியில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கதிரவனுக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி திடீரென கதிரவன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும், கழுகுமலை போலீசார் கதிரவன் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது மட்டுமின்றி, அதற்கு ஆதரமாக ஆடியோவும் கிடைத்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட கதிரவன், கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த நடராஜனின் மனைவி மாணிக்கம் என்பவரிடம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 ஆயிரம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு வாரம் தோறும் 500 ரூபாய் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இடையில் கதிரவனால் சரிவர கொடுக்க முடியவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கதிரவன் மற்றும் அவரது மனைவி பேச்சியம்மாள் ஆகிய இருவரும் மாணிக்கத்திடம் ரூ.7 ஆயிரம் கொடுத்துவிட்டு கணக்கை சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி கதிரவன் பைக்கில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றபோது, மாணிக்கத்தின் கணவர் நடராஜன், வழிமறித்து கடன் தொகை குறித்து கேட்டுள்ளார். 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து கணக்கினை முடித்து விட்டதாக கதிரவன் கூறியுள்ளார்.

வேலைக்கு போக வேண்டிய அவசரத்தில் கதிரவன் பைக்கில் இருந்து கீழே இறங்காமல் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜன், மரியாதை இல்லமால் எப்படி பைக்கில் அமர்ந்து நீ பேசலாம் என்று அதட்டியுள்ளார். வேலைக்கு போகும் அவசரம் என்று கதிரவன் கூறிய பிறகும், எப்படி இறங்கமால் பேசலாம் என்று நடராஜன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.10 கோடி நஷ்ட ஈடு; பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்!

ஒரு கட்டத்தில் கோபமடைந்த நடாரஜன், உன் வீட்டிற்கு வந்தே மூக்கை பெயர்த்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும், எனது வீட்டிற்கு வந்து வாங்கிய கடன் குறித்து கணக்கு வழக்கினை பார்த்து முடிக்க வேண்டும், இல்லையென்றால் நீ வேலை பார்க்க முடியாது, வேலையை நிறுத்தி விடுவேன், மரியாதையாக வீட்டிற்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

தனக்கு வேலை முடிய தாமதமாகும் என்று கதிரவன் கூறியபோதும், எப்போது வேலை முடிந்தாலும் தனது வீட்டிற்கு வர வேண்டும், மரியாதையாக வர வேண்டும், இல்லையென்றால் கை நீட்ட வேண்டிய நிலை உருவாகும், கண்டிப்பாக அடிப்பேன் என்று நடராஜன் மிரட்டியுள்ளார்.

மேலும், 16 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டதாகவும், சாதியைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. கதிரவன் தனது நண்பர்களிடம் நடராஜன் மிரட்டியதை கூறியது மட்டுமின்றி, நடராஜன் பேசிய ஆடியோவினை காட்டியுள்ளார். தன்னால் தனது குடும்பமும் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக அவர் புலம்பியுள்ளார்.

இந்த நிலையில், கதிரவன் தற்கொலை செய்துள்ளார். கதிரவனை, நடராஜன் மிரட்டியதாக கூறப்படும் ஆடியோவினை போலீசார் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, தீண்டாமை வன்கொடுமை எஸ்.சி/ எஸ்.டி பிரிவு மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடராஜனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நடராஜன், தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு நடராஜனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையெடுத்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவர் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பரோலில் வெளியே வந்துள்ள நிலையில், அவர் அக்டோபர் 15 ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கதிரவன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கழுகுமலை பகுதியில் கந்து வட்டி கொடுமையினால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உயிரிழந்த கதிரவன் குடும்பத்திற்கு உரிய நிதியை அரசு வழங்க வேண்டும், கதிரவன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் அவர்கள் குடியிருக்க இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் என அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.