ETV Bharat / state

ஊரடங்கு விதிகளை மீறியதாக 15 ஆயிரம் வழக்குகள் பதிவு - ரூ.25லட்சம் அபராதம் வசூல்

author img

By

Published : Jan 16, 2022, 4:51 PM IST

தூத்துக்குடியில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 15 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் ரூ.25லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு விதிகளை மீறியதாக 15 ஆயிரம் வழக்குகள் பதிவு - ரூ.25லட்சம் அபராதம் வசூல்
ஊரடங்கு விதிகளை மீறியதாக 15 ஆயிரம் வழக்குகள் பதிவு - ரூ.25லட்சம் அபராதம் வசூல்

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கரோனா‌ 3ஆம் அலையான ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிவேகமாகப் பரவிவருகிறது. இதனைக்கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கைக் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைபிடித்தல், பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை, திருமணம், துக்க நிகழ்ச்சி போன்றவைகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி எனக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் நோய்க் கட்டுபாட்டு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

முக்கிய பகுதிகள் வெறிச்சோடின

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் ஜனவரி 15, 16,17 ஆகிய மூன்று நாள்கள் மதுக்கடைகளை மூடவும் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இது நாளை காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்பதால் ஊரடங்கு விதிமுறைகளைக் கடைபிடிக்க பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு தரும்படி காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

முழு ஊரடங்கைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதிகளான தமிழ் சாலை, வ.உ.சி. சாலை, கீழரத வீதி, பழைய துறைமுக சாலை ரோடு, ஜெயராஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.மருந்தகம், பால், காய்கறி அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கை முன்னிட்டு பொது போக்குவரத்தும் நடைபெறாததால் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகியவை வெற்று மைதானமாக காட்சியளித்தது.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் எல்லைக்குள்பட்ட குரூஸ் பர்னாந்து சந்திப்பில் அவசியமின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிந்தோரை மாவட்ட காவல்துறையினர் பிடித்து எச்சரித்து அனுப்பினர். இப்பணிகளை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ரூ.25லட்சம் வரை அபராதம் வசூல்:

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, ”முழுஊரடங்கு விதிமுறைகள் மீறுவோரை கண்காணிப்பதற்காகக் காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படுகின்றன.

இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 15 துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 1500 காவலர்கள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:24 மணி நேரத்தில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.