தூத்துக்குடி: முத்தையாபுரம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர், அற்புதராஜ் (65). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் தங்கதுரை சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம், தங்கதுரை அவரது மனைவி அஸ்வினி (28) மற்றும் 5 வயது மகனுடன் முத்தையாபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பின்னர் தங்கதுரை தனது குடும்பத்தை விட்டு விட்டு, சென்னைக்கு மீண்டும் சென்றுள்ளார். அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி இரவு அற்புதராஜ் தனது பேன்சி கடைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் அற்புதராஜ் மனைவி செல்வராணி (60), மருமகள் அஸ்வினி, 5 வயது பேரக்குழந்தை ஆகியோர் இருந்துள்ளனர்.
அப்போது பர்தா அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் அவர்கள் வீட்டின் உள்ளே புகுந்து, வீட்டில் இருந்த செல்வராணி மற்றும் அஸ்வினியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் கழுத்தில் கிடந்த செயின் மற்றும் மோதிரத்தை முதலில் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் பீரோவைத் திறக்கச் சொல்லி பீரோவில் இருந்த கம்மல், மூக்குத்தி, செயின், வளையல் உள்பட சுமார் 58 சவரன் நகைகளை கொள்ளை அடித்ததுடன், மாமியார் மருமகள் இருவரையும் துப்பட்டாவால் கட்டி போட்டு விட்டு தப்பி ஓடியதாகவும், மருமகள் அஸ்வினி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், செல்வராணி மற்றும் அஸ்வினியை தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். இதில் முன்னுக்குப் பின் முரணான தகவலை அஸ்வினி அளித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து சந்தேகமடைந்த டிஎஸ்பி சத்யராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மீண்டும் அஸ்வினியுடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் நடத்தியது கொள்ளை நாடகம் என்பது உறுதியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த காவல் துறையினர், அஸ்வினியின் செல்போனை வாங்கி விசாரணை நடத்தினர். அதில் அவரது செல்போனுக்கு வந்த கால்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில், அதில் ஒரு நபர் மட்டும் பர்தா அணிந்து வந்து செல்வதும் தெரிய வந்துள்ளது.
பின்னர் முத்தையாபுரம் காவல் துறையினர் அஸ்வினியைப் பிடித்து விசாரணை செய்ததில், சென்னையில் அஸ்வினி ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு பணத்தை இழந்ததுடன், அதற்காக தன்னிடமிருந்த சுமார் 30 சவரன் நகையை அடமானம் வைத்து மீட்க முடியாமல் இருந்துள்ளார்.
இந்த நகை தொடர்பாக கணவர் தங்கதுரை கேட்கும்போது, ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சமாளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அஸ்வினி தனது அக்கா சுசிலாவுடன் சேர்ந்து தனது மாமியார் வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடித்து, பிரச்னையை சமாளிக்க முடிவு செய்து, அஸ்வினியும் அவரது அக்கா சுசிலாவும் திட்டம் தீட்டியுள்ளனர்.
பின்னர், தூத்துக்குடியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்த அஸ்வினி, வீட்டில் மாமனார் அற்புதராஜ் கடைக்குச் சென்றவுடன் தாங்கள் 3 பேரும் தனியாக இருப்பதாக தனது அக்காவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது, சுசிலா பர்தா அணிந்து வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி 52 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து முத்தையாபுரம் காவல் துறையினர் அஸ்வினியை கைது செய்ததுடன், தலைமறைவாக உள்ள அவரது சகோதரி சுசிலாவையும் தேடி வருகின்றனர். ஆன்லைன் டிரேடிங்கில் இழந்த பணத்தை சரி கட்ட, தனது மாமியார் வீட்டிலேயே மருமகள் தனது அக்காளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.