ETV Bharat / state

போலி வீடியோ விவகாரம் - பகை வளர்க்கமாட்டேன் என தூத்துக்குடியில் உறுதி கொடுத்த உ.பி. பாஜக நிர்வாகி

author img

By

Published : Apr 13, 2023, 7:02 PM IST

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்; மதம், இனம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏதும் பார்வேர்ட் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி தாக்கல்!.

வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி; பிரசாந்த் உம்ராவ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் உறுதிமொழி தாக்கல்!.
வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி; பிரசாந்த் உம்ராவ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் உறுதிமொழி தாக்கல்!.

வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி; பிரசாந்த் உம்ராவ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் உறுதிமொழி தாக்கல்!.

தூத்துக்குடி: வட மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் உம்ராவ், வட மாநிலத்தவர்களை தமிழகத்தினை சேர்ந்தவர்கள் வேலைக்கு வந்த இடத்தில் தாக்குவதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பியதால், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் என்ற நபர் மீது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு பிரசாந்த் உம்ராவ் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றம் பிரசாந்த் உம்ராவை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்கள் ஆஜராக உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, பிரசாந்த் உம்ராவ் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உச்சநீதிமன்றம் பிரசாந்த் உம்ராவை இன்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, (10.04.2023) திங்கள் கிழமை தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பிரசாந்த் உம்ராவ் ஆஜரானார். இவரை, திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், தூத்துக்குடி டிஎஸ்பி சத்யராஜ் மற்றும் மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையானது, சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது.

மேலும், இந்த வழக்குத் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன்தாரர்களை ஆஜர்படுத்தவும், அவர்களது வாக்குமூலத்தை தாக்கல் செய்யவும் இன்று நீதிபதி கனிமொழி முன் ஆஜரானார். அப்போது நீதிபதி முன்னிலையில், ’’பகையை வளர்க்கும் வகையில் இதுபோன்ற செய்திகளை ட்வீட் செய்யவோ அல்லது ஃபார்வேர்டு செய்யவோ மாட்டேன். மதம், இனம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பிறப்பு, வசிப்பிடம், மொழி போன்றவை குறித்து பகைமை ஏற்படும் வகையில் ஏதும் ஃபார்வேர்ட் செய்ய மாட்டேன்’’ என்று உறுதிமொழி தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் தரப்பில் கூறப்படுகிறது.

பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் அவரது வழக்கறிஞர் ராம சுப்பு கூறுகையில், ’’கடந்த 2 தினங்களுக்கு முன் மத்திய பாகம் காவல் நிலையத்தில் எட்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறார். இருந்தும் கூட தமிழக காவல்துறை சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் 15 நாட்களுக்கு வரவேண்டாம் என்று சொன்னதற்கு மாறாக, இவரை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை வர வைக்க வேண்டும்; தொந்தரவு செய்ய வேண்டும் என்று அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தமிழக அரசு செயல்படுகிறது.

இவர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். மேலும் பாஜக செய்தி தொடர்பாளரும் ஆவார். அப்படி இருக்கும்பட்சத்தில் இவ்விவகாரம், தமிழக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தூண்டுதலின் பேரில் நடைபெறுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயல்களுக்கு காவல்துறை உச்ச நீதிமன்றத்திடம் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும்.

மேலும், தற்போது வழக்கு நடைபெற்று வருவதால் இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், இந்த வழக்கை உரிய முறையில் கொண்டு செல்லத் தயாராக உள்ளோம். இந்தி தெரியாத நபர் ஒருத்தர் இந்த வழக்கை கொடுத்துள்ளது’’ வேடிக்கையாக உள்ளதாக கூறினார். அப்போது, பாஜக தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர், வழக்கறிஞர் சுரேஷ் குமார், வழக்கறிஞர் சின்னத்தம்பி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி; போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்.. சிக்கும் பாஜக முக்கியப்புள்ளிகள்.. அடுத்து?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.