ETV Bharat / state

தூத்துக்குடியில் விளையாட்டு மைதானத்துக்கு இடம்தராத மாநகராட்சியைக்கண்டித்து மக்கள் மறியல்

author img

By

Published : Aug 23, 2022, 10:21 PM IST

தூத்துக்குடியில் விளையாட்டு மைதானத்துக்கு இடம் தராத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, தாளமுத்து நகரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு மைதானத்துக்கு இடம் தராத மாநகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
விளையாட்டு மைதானத்துக்கு இடம் தராத மாநகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி: தூத்துக்குடி விளையாட்டு மைதானத்துக்கு இடம் தராத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தாளமுத்து நகரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். தூத்துக்குடி, தாளமுத்து நகர்ப்பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் 8 1/2 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த இடத்தில் சுமார் ஒரு ஏக்கர் இடத்தை தாளமுத்து நகர் பகுதியைச்சேர்ந்த மக்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள ஆர்சி நடுநிலைப் பள்ளியைச்சேர்ந்த மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்த மக்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களைச் சந்தித்து, தங்களுக்கு சுமார் ஒரு ஏக்கர் இடம் விளையாட்டு மைதானத்துக்காக மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டுமென மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இந்நிலையில், இன்று(ஆக.23) காலை அந்தப் பகுதிக்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் 8.5 ஏக்கர் இடத்தையும் சுற்றி, வேலி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை அடுத்து அங்கு வந்த பொதுமக்கள் மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு சொன்னபடி, ஒரு ஏக்கர் இடத்தை விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியைத்தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.