தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு கலவரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.
20 கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் ஒரு நபர் ஆணையத்தின் 21ஆவது கட்ட விசாரணை தற்போது தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.
மேலும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கலவரத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை பாரபட்சமாக வழங்கப்பட்டுள்ளது.
இதனை மறுபரிசீலனை செய்து கல்வித்தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கக்கோரி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நீதிபதி அருணா ஜெகதீசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த குடும்பத்தினருக்கு அரசு நிவாரணமாக தலையாரி வேலையை வழங்கியுள்ளது.
ஆனால், சமீபத்தில் சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றபோது தமிழ்நாடு அரசும், அரசு அலுவலர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் என உறுதியளித்திருந்தனர்.
அதனடிப்படையில் வேலை வழங்கப்படவில்லை. எனவே, கல்வித்தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும் - கனிமொழி எம்.பி.