Sterlite protest: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்திவருகிறது.
ஒரு நபர் ஆணையத்தில் இதுவரை 33 கட்ட விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 1,016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் 34ஆவது அமர்வு விசாரணை இன்று (டிசம்பர் 27) தொடங்கியது.
இந்த விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் ஒன்பது பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு நபர் ஆணையத்தின் 34ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கி வருகிற 30ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இன்று நடைபெறும் முதல் நாள் விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போது சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு - 2 காவல் கண்காணிப்பாளராகிய அருண் பாலகோபாலன் ஆஜரானார்.
இவர் ஏற்கனவே 33ஆவது கட்ட விசாரணையின்போதும் ஆஜராகி ஆணையத்தின் முன்பு விளக்கம் அளித்தார். நாளை (டிசம்பர் 27) நடைபெறும் 2ஆவது நாள் விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய காவல் துணைக் கண்காணிப்பாளரும், தற்போது கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான செல்வ நாகரத்தினம் ஆஜராக உள்ளார்.
நாளை மறுநாள் (டிசம்பர் 29) நடைபெறும் விசாரணைக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனும், 30ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பனும் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின்போது கட்டடத்தின் டைல்ஸ் வெடிப்பால் பரபரப்பு