ETV Bharat / state

ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிகோரி அரசிடம் மீனவர்கள் மனு

author img

By

Published : Mar 6, 2020, 11:52 AM IST

தூத்துக்குடி: விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர்.

Fisherman
Fisherman

தூத்துக்குடி மாவட்டம், மீன்பிடி துறைமுகத்தை தளமாகக் கொண்டு 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில், இன்று விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாமல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் செல்லும் விசைப்படகுகள் காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும். விசைப்படகில் பயன்படுத்தப்படும் வலையின் அளவு 40 மில்லி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று மீன்வளத் துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தூத்துக்குடியில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகத்தை விசைப்படகு மீனவர்கள் முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின் அவர்கள், இணை இயக்குநர் சந்திராவை சந்தித்து பேசினர். அப்போது சந்திரா, ஆழ்கடலில் தங்கி மீனவர்கள் மீன் பிடிக்க மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின் இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகி ஜான் போஸ்கோ பத்திரிக்கையாளரை சந்தித்து கூறுகையில், “விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். கன்னியாகுமரி மீனவர்கள் போல தூத்துக்குடி மீனவர்களும் ஆழ்கடலில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தங்கி மீன் பிடிப்பதை நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்க உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: மீன்வளத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.