ETV Bharat / state

உலக மீனவர் தினம்: மீன்பிடித் தொழிலில் மீனவர்கள் படும் இன்னல்கள், அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 12:30 PM IST

World Fishermen's Day: உலக மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது. உணவு மற்றும் விற்பனைக்கு மீன் பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்பில் ஈடுபடுவோரையும் மீனவர்கள் என்று அழைக்கிறோம். தமிழ் நுட்ப வல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்று, மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள். இன்று உலக மீனவர் தின வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரம் பெற்று 77ஆண்டுகாலம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மீனவர்களின் துயரம் ஓரளவு நீங்கியாதா என்பது குறித்து ஒரு சிறப்பு தொகுப்பு..

மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர் அன்டன் கோம்ஸ்
உலக மீனவர் தினம்

தூத்துக்குடி: கடலில், மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி டெல்லியில் கூடினர். அரசு கொண்டு வரும் திட்டங்களாலும், சூழலியல் மாற்றத்தாலும், கடல் மாசடைந்து மீன் வளம் குன்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உலக அளவில் உரிமைக்குரல் கொடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மீன்பிடி 'தொழிலாளர்கள் பேரவை' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் மீனவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நவம்பர் 21ஆம் தேதி உலக மீனவர்கள் தினம் என்று அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 7,515 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டிருக்கும் இந்தியாவில், சுமார் 1,076 கி.மீ கடற்கரையை தமிழகம் கொண்டுள்ளது. மீன்பிடித் தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மீன்பிடித்தலின் முக்கியத்துவம் என்ன?: மீன் மற்றும் பிற கடல் உயிரினங்கள் உலகெங்கிலும் உணவுப் பொருட்களாக உள்ளது. மீன்பிடி தினம் வணிகத்தின் எதிர்கால மைல் கற்கள் மற்றும் இலக்குகளை குறிக்கிறது. கடல் மாசுபாடு, எண்ணெய் கசிவுகள், நீல-பச்சை பாசிகளின் வளர்ச்சி, நச்சு இரசாயனங்கள் மற்றும் கடல் நீரில் பிளாஸ்டிக் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல சிக்கல்களை மீன்பிடித் தொழில் எதிர்கொள்கிறது. புவி வெப்பமடைதலின் விளைவாக சர்வதேச நீர்நிலைகளின் வெப்பநிலை அதிகரித்து கடல் வாழ் உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படும்.

இந்தியாவில் மீன்வள பங்கு: இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (GDP) மீனவர்களின் பங்கு 1%. கடந்த 2021 ல் மீனவர்களின் பங்கு 3.18 லட்சம் அமெரிக்க டாலர். அதாவது, ரூ.2.54 லட்சம் கோடி ஆகும். கடல் உணவு ஏற்றுமதியால் கிடைத்த அந்நிய செலவாணி 6.68 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ரூ.46,663 கோடி. இது உலக கடல் உணவு ஏற்றுமதியில் 4.1% மற்றும் இந்தியாவின் மொத்த விவசாய பொருள் ஏற்றுமதியில் 19% ஆகும். பாரம்பரிய மீனவரின் மீன்பிடியில் 15% ஏற்றுமதிக்கும், 85% உள்நாட்டு சந்தையில், குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க பயன்படுகிறது. இதில் 1.9 டன் மீனும், மற்ற கடல் உணவுமாகும். இதன் மதிப்பு ரூ.57.9 கோடி.

பாரம்பரிய மீனவர்களின் சிறப்பான செயல்பாட்டில் மீன்வளத்துறையின் பெரிய பங்களிப்பை கருத்தில் கொண்டு, பட்ஜெட்டில் ஆண்டுக்கு 2.54 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், 2021-22 ல் ரூ.1,360 கோடியும், 2022-23ல் ரூ.1,624.18 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2021-22ல் ரூ. 925.5 கோடி PMMSY திட்டம் மூலமாக மாநில அரசுகளுக்கு சென்றுள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டிலிருந்து GDP பங்களிப்பின் அடிப்படையில் மீன்வளத்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியில், வெறும் 0.0053% மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிதியும், நிர்வாக செலவுகள், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்கின்றன. நிதி உதவி செய்து பாரம்பரிய மீன்பிடி தொழிலை முன்னேற்றுவதில் அரசு தீவிரம் காட்டவில்லை என்பதை அறிய முடிகிறது. 2 கோடிக்கு அதிகமான இந்தியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாரம்பரிய மீன்பிடித் தொழில் மற்றும் அதன் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் என்ன?: தேசிய வருமானத்தில் மீனவர்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு, கலால் வரி நீக்கி உற்பத்தி விலையில் வழங்க வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆழ்கடல் மீன்பிடிப்பை மேம்படுத்த, 90% மானியத்தில், 4% வட்டியில் வங்கி கடன், மீன்பிடி படகு, வலைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்துக்கும் சேர்த்து, பாரம்பரிய மீனவர்களுக்கு (விசைப்படகு, நாட்டுப்படகு, கட்டுமரப்படகு) மட்டும் வழங்கி, கார்ப்பரேட்கள் உள்ளே நுழைவதை அரசு தடுக்க வேண்டும்.

இந்திய மாலுமிகள் பெரும்பான்மையினர் தூத்துக்குடியை சேர்ந்தவர்களாக உள்ளனர். பல விதமான, மாலுமிகள் தொடர்புடைய பாடத் திட்டங்களை பயில சென்னை, மும்பை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால், பொருட்செலவும், விடுமுறையிலும் குடும்பங்களை பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஆகவே, தூத்துக்குடியில், தமிழக அரசால் நடத்தப்படும், தமிழ்நாடு கடல்சார் நிறுவனங்கள்( Tamil Nadu Maritime Acadamy (TNMA) இருந்த போதிலும் தேவையான பாட பிரிவுகள் இல்லை.

குறிப்பாக இன்றைய அத்தியாவசிய தேவையான PSCRP, Advance fire fighting உள்ளிட்ட பல பிரிவுகள் தொடங்க தமிழ்நாடு கடல்சார் நிறுவனம் TNMA (Tamilnadu Maritime Academy) தயாராக இருந்தும், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate general of shipping (Govt of India) ஒப்புதல் அளிக்கவில்லை. தாமதமின்றி ஒப்புதல் அளிக்க கப்பல் போக்குவரத்து துறை, கப்பல் போக்குவரத்து இயக்குநரகரத்திற்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், Saloon rating for Rantings, அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கான மேம்பட்ட கடல்சார் பயிற்சி படிப்புகள் (Advance modulear courses for officers and engineers, கடல் மற்றும் இயந்திர பொறியாளர்கள் (GME) (Graduate Marine engineering) for marine & mechanicalengineers, டிப்ளமோ (MEO class 4,2 & chief, Diploma in nautical science), இளநிலை கடல் அறிவியல் (B.sc.in nautical science), Second mate and chief mate courses for officers உள்ளிட்ட பாட பிரிவுகள் TNMA மூலமாகவும், தனி அமைப்பு மூலமாகவும் தூத்துக்குடியில் தொடங்கி 20,000க்கும் அதிகமான மாலுமிகள் உள்ள தென்பகுதி மீனவ சமுதாயத்திற்கு உதவிட மத்திய கப்பல் துறை அமைச்சகம் மூலம் கப்பல் போக்குவரத்து இயக்குநரகரத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை.

இது போன்று அமெரிக்கா (US), பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் SID (Seafarer's identity card) பெறுவது மாலுமிகளுக்கு கட்டாயமாக்கியுள்ளதால், அதனை பெற சென்னை MMD (Mercantile marine department) அணுக வேண்டியுள்ளது. இதனால் வீண் அலைச்சலும், பொருள் செலவும் ஏற்டுகிறது. இதனை தவிர்க்க, தூத்துக்குடியில் உள்ள MMD அலுவலகம், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் உள்ள MMD க்கு இணையாக செயல்பட ஆவனம் செய்தால் SID கார்டு பெறுவது, மற்றும் பல MMD யால் நடத்தப்படும் தேர்வுகள் அலைச்சல் இன்றி தூத்துக்குடியில் எழுத முடியும். எனவே இதற்கு மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஆவனம் செய்ய நடவடிக்கை எடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும், மீனவர்களின் துயரம் தீர்ந்ததா, நிலைப்பாடு என்ன என்பது பற்றி அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர் அன்டன் கோம்ஸ், ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, "சுதந்திர இந்தியாவில் மீனவர்களின் 77 ஆண்டுகால நெடிய துயரை துடைக்கவே இந்த உலக மீனவர் தின வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. கல்வி, பொருளாதாரத்தில் இன்று வரை பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறோம். பாரம்பரிய மீனவர்களை அரசு பழங்குடி பட்டியலில் இணைக்க வேண்டும்.

மீனவர்கள் ஈட்டித் தரும் அந்நிய செலாவணியில் ஒரு சிறு பகுதியை மீனவர் நலனுக்கு ஒதுக்கி, ஊக்குவித்து நாட்டின் வருவாயை பெருக்க அரசு முயல வேண்டும். அதன் ஒருபகுதியாக மீனவர் ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டு மீனவர்கள் பயன்படுத்தும் டீசலுக்கு சம்பந்தமில்லாத சாலை வரி, பசுமை வரி நீக்கி, தேசிய வருமானத்தில் மீனவர்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு கலால் வரி நீக்கி உற்பத்தி விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்.

மீன்பிடி உபகரணங்கள், படகு கட்டுதல் தொடர்பான செயல்களுக்கு GST விலக்கு தர வேண்டும். தமிழக அண்மை கடல் பகுதிகளில் குமரி முதல் நாகை வரை காற்றாலை அமைத்தல், நாகை முதல் கடலூர் வரை கனிம சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக கடல் பரப்பில் கார்ப்பரேட்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். திருவள்ளூர் மாவட்ட கடற்கரையிலும், கடலூர் கடல் மற்றும் பழவேற்காடு ஏரியிலும் தலா 2,000 ஏக்கர் வீதம் 6,000 ஏக்கர், 99 வருட குத்தகைக்கு தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது போன்றவைகளை தடுத்து, CRZ(IV)ன் படி, 12 நாட்டிக்கல் மைல் வரையான கடல் பகுதியை காத்து மீனவர் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.

மத்திய, மாநில அரசின் திட்டங்களில், பாரம்பரிய மீனவர்களின் அண்மை கடல் மீன்பிடி தொழிலை ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டு, 90% பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரமான அண்மை கடல் மீன்பிடி தொழிலை காக்க சாகர் மாலா திட்டத்தின் கீழ் வரும் தனியார் துறைமுகங்களை தடை செய்ய வேண்டும். 2011ல் பேராசிரியர் M.S.சுவாமிநாதன் தலைமையிலான 4 உறுப்பினர் குழு The Final Frontier (இறுதி எல்லை) என்ற பரிந்துரையின் அடிப்படையில், தற்போது இருக்கும் துறைமுகங்களை முழு சக்தியுடன் உபயோகிக்க பரிசீலிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும்.

வணிக கப்பல்கள், வெளி நாட்டு மீன்பிடி கப்பல்களில் பணிபுரிவோரின் உயிரிழப்பு, உடலுறுப்பு பாதிப்பிற்கான இழப்பீடு மற்றும் பணி காலத்தில் நிர்வாகத்தால் ஏற்படும் பாதிப்பு, உரிய ஊதிய மறுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மாலுமிகளுக்கு உதவ, உள்நாடு மற்றும் அந்நிய நாட்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு தீர்வு காண, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததன் விளைவாக, 1983 ம் ஆண்டு தொடங்கிய இலங்கை கப்பற்படையின் துப்பாக்கி சூட்டில், இன்று வரை 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் உடலுறுப்புகளை இழந்தும், பலர் மாதக்கணக்கில் சிறை தண்டனை அனுபவித்தும், படகுகளை இழந்தும், சிலர் உடல் கூட கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இழப்பீடு கூட பெற முடியாமல் அழிந்த வரலாறும் உள்ளது.

இந்திய எல்லையில் அத்து மீறி இந்திய குடிமக்களை கொலை செய்ததை, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நிபந்தனை மீறலை (Breach of contract) காரணம் காட்டி கச்ச தீவை திரும்ப பெற வேண்டும். மக்கள் அங்கீகாரமின்றி (Mandate) நம் கடல் எல்லை மாற்றப்பட்டதை ரத்து செய்து, நம் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வேண்டும். அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையால் ஏற்பட்ட இந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்று, போரில் பாதிக்கப்பட்டோருக்கான வாரியம் (War victim board) போல், இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு மறுவாழ்வு ஏற்படுத்த ஒரு அமைப்பை அரசு உருவாக்கி, பாதிக்கப்பட்ட பெற்றோர், விதவைகள், குழந்தைகளை கணக்கெடுத்து மறுவாழ்வு, நிவாரணம், கல்வி, வேலைவாய்ப்பு வழங்கிட மத்திய அரசை பரிந்துரைக்க வேண்டும்.

ஒரு ராணுவ வீரனின் மனைவியை விட மீனவனின் மனைவிக்குத்தான் அதிகம் துணிச்சல் தேவை. ராணுவ வீரனின் மனைவி, போர் வரும்போது கணவன் குறித்த பயத்தில் வாழ்கிறாள். மீனவனின் மனைவி கணவன் கடலுக்குள் போய் வரும் போதெல்லாம் பயத்தில் வாழ்கிறாள் என்கிறதுவறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய 1000 கடல் மைல் என்னும் நூல். குரலற்ற மீனவ மக்களின் குரலாக மத்திய, மாநில அரசுகள் இதனை உடனடியாக செயல்படுத்த முன் வர வேண்டும். அப்போது தான் நாங்கள் மகழ்ச்சியாக மீனவர் தினம் கொண்டாட முடியும்” என்றார்.

மீனவர் தின வெள்ளி விழா கொண்டாடும் இந்நாளில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: தொடர் மழையால் நிரம்பி வழியும் வரதமாநதி அணையின் கழுகுப்பார்வை காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.