திருவாரூர் மாவட்டம், ஆண்டிபந்தல் அருகே பொதுமக்கள் நலன் கருதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 கோடி செலவில் மத்திய அரசின் ரயில்வே துறை சார்பில், ரயில்வே கீழ் பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலத்தை ஆண்டிப்பந்தல், அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பாக, ரயில்வே பாலமானது நாகை, திருவாரூர் எல்லை பகுதியில் கட்டப்பட்டதால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வடகரை, கொட்டூர், திருப்பனையூர் உள்ளிட்ட கிராம மக்கள் அவசர தேவைகளான மருத்துவமனை, விவசாய பணிகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்வதற்கும், ரயில்வே கீழ் பாலத்தைப் பிரதானமாகப் பயன்படுத்தி வந்தனர்.
ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் சரியான முறையில் கட்டப்படாததால், மழை பெய்யும் நேரங்களில் பாலத்தினுள் நீர் புகுந்து அவற்றை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. சரியான முறையில் திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட பாலத்துக்கு செலவிடப்பட்ட பணம் பயனற்று போய்விட்டதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாகை சுற்றுவட்டார மக்களின் முக்கிய தேவையான ரயில்வே கீழ் பாலத்தை, மழை காலங்களில் நீர் தேங்காதவாறு அவற்றை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என, அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.