திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ராசப்பன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன். இவருக்கும் குடவாசல் அருகேயுள்ள அகரத்திருநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுகன்யாவிற்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜன் மலேசியாவிற்கு ஓட்டுநர் பணிக்காகச் சென்றுள்ளார். 10 நாள்களுக்கு முன்னர் சுகன்யாவிடம் ராஜராஜன் பேசியபோது, இந்த மாத இறுதியில் சொந்த ஊர் திரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ராஜராஜன் தொலைபேசியில் அழைக்கவில்லை. மேலும் அவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (பிப். 12) நீடாமங்கலம் காவல்துறையினர் ராஜராஜன் இறந்துவிட்டதாக சுகன்யாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுகன்யா தனது உறவினர்களுடன் இன்று (பிப். 13) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலேசியாவில் கணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை மீட்டு தமிழ்நாடு கொண்டுவந்து உடற்கூராய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் இறந்த இளைஞரின் உடலை மீட்டுத் தர உறவினர்கள் கோரிக்கை!