ETV Bharat / state

சாலை வசதி இல்லாததால் பெண் உடலை டோலியில் சுமந்து சென்ற அவலம்! நடவடிக்கை எடுக்குமா அரசு?

author img

By

Published : Jun 25, 2023, 12:24 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் உள்ள சீங்காடு மலைக் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்ணின் உடலை டோலி மூலமாக, அவரது உறவினர்கள் சுமந்து சென்றனர். சாலை அமைத்துத் தர மலைக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

singaadu village
சீங்காடு மலை கிராமம்

திருவண்ணாமலை: ஜமுனாமரத்தூர் அருகில் கானமலை ஊராட்சி சீங்காடு கிராமத்தில் வசிப்பவர், ராமராஜ். இவரது மனைவி சுசீலா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சுசீலாவை வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பயன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவமனையில் இருந்து சீங்காடு கிரமத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது.

சீங்காடு கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லாததால் பாதிரிபெருவள்ளி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து சுசீலாவின் உடலை டோலி மூலமாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைப்பாதையில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமந்து சென்றனர்.

இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தியவர் கருணாநிதி - எ.வ.வேலு பெருமிதம்

இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே கானமலை ஊராட்சி, எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடலும் எலந்தம்பட்டு கிராமத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தால் படவேடு அருகே ஜவ்வாது மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு அவரது உறவினர்கள் டோலி மூலமாக சுமந்து கொண்டு சென்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், ''கானமலை ஊராட்சியில் உள்ள மலைக் கிராமங்களுக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் அத்தியாவசியத் தேவைக்குக் கூட மக்கள் அவதிப்படுகிறார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும், பாதிக்கப்படுபவர்களைச் சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்களை கிராமத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை டோலி மூலமாக கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் சாலை அமைத்துத் தரக்கோரி பல்வேறு மனு அரசு அலுவலகங்களில் அளித்து அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கள் பகுதிகளை அதிகாரிகள் நேரில் வந்து பார்வை இடுவதும் இல்லை. எனவே, இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சாலை அமைத்துத் தர சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், இன்னும் இவ்வாறு சாலைவசதி பெறாத மலைக்கிராமங்கள் நம் நாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஜூலை 9-ல் கோவை மத்திய சிறை முற்றுகை' - மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.