ETV Bharat / state

Maha Shivratri: அண்ணாமலையார் கோயில் லிங்கோத்பவர் சிறப்பு அபிஷேகம்

author img

By

Published : Feb 19, 2023, 10:27 AM IST

Maha Shivratri: மகா சிவராத்தியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்யப்பட்டன.

Etv Bharat
Etv Bharat

Maha Shivratri: அண்ணாமலையார் கோயில் லிங்கோத்பவர் சிறப்பு அபிஷேகம்

Maha Shivratri: திருவண்ணாமலை: மகா சிவராத்தியை முன்னிட்டு ஜோதி பிழம்பாக எழுந்தருளிய லிங்கோத்பவருக்கு (பிப்.19)நள்ளிரவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். திருமால் மற்றும் பிரம்மன் ஆகிய இருவரில் யார் பெரியவர் என போட்டி வந்தபோது, 'நான்' என்ற அகந்தை அடங்கினாலன்றி சிவ பரம்பொருளை காண முடியாது என்ற உண்மையை உலகிற்கும், திருமால் மற்றும் பிரம்மனுக்கும் உணர்த்தும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருபவர்களே பெரியவர் என சிவபெருமான் கூறினார்.

இதனையடுத்து திருமால், வராக அவதாரம் எடுத்து அடியைக் காண பூமியை குடைந்து சென்றும், பிரம்மன் அன்னபட்சியாக உருவெடுத்து முடியைக்காணவும் உயரப்பறந்து சென்றனர். இருவரும் பல யுகங்களாக தேடியும் அடியையும், முடியையும் காண முடியாமல் தோல்வி அடைந்ததுடன் திருமால் தனது தவறை உணர்ந்து சிவனிடம் சென்று வழிபட்டனர். பிரம்மன் மேலும் பல யுகங்களாக சென்று முடியை காண முடியாத சூழலில், மேலிருந்து கீழே வந்த தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்தார்.

இதனையறிந்த சிவபெருமான் நெருப்பு பிழம்பாக லிங்க வடிவாய் வெளியே வந்து அனைத்து தேவர்களுக்கும் நல்லாசி வழங்கியதுடன் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோயில்கள் இல்லை என்றும், பொய்சாட்சி கூறிய தாழம்பூ பூஜைக்குப் பயன்படாது என்றும் சாபம் அளித்து லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சியளித்தார்.

மகா சிவராத்தியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சந்நிதி பின்புறம் மேற்குத் திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு லிங்கோத்பவரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதையும் படிங்க: சனி பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.