ETV Bharat / state

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய சமூக விரோதிகள்!

author img

By

Published : Jun 5, 2021, 9:38 PM IST

 கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்

திருவண்ணாமலை: வந்தவாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சமூக விரோதிகளை விரைவில் கைது செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரிலுள்ள கோலாபாடியார் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக அலுவலகம் தற்போது திறக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 4) நிர்வாகிகள் அலுவலகத்தை திறந்த பார்த்தபோது அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்து மேசை, நாற்காலி, மூன்று பீரோக்கள், மின்சாதன பொருள்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கியிருந்தது தெரியவந்தது.

மேலும், பீரோவிலிருந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதற்கும் மேலாக அலுவலகம் சம்பந்தமான முக்கிய ஆவணங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர். இவற்றையெல்லாம் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி டிஎஸ்பி தங்கராமன் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,

"திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் மீரா காதர் சாஹிப் தெருவில் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை கொடூரமாக அடித்து நொறுக்கி சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்திட சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் எங்கள் கட்சியின் தாலுகா செயலாளர் ஜா.வே.சிவராமன் அவர்கள் நேற்று (ஜூன் 4) இரவு புகார் மனு கொடுத்துள்ளார்.

மக்கள் நலன் சார்ந்து நாளும் போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி தாலுகா குழு அலுவலகம் மக்கள் மிகநெருக்கமாக குடியிருக்கும் பகுதியான வந்தவாசி நகரில் மீரா காதர் சாஹிப் தெருவில் கடந்த 15 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது.

சமூகவிரோதிகள் சிலர் எங்கள் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து குறிப்பாக மின் இணைப்பு மீட்டர் பெட்டி, பீரோ, மேஜை, நாற்காலிகள் சேதப்படுத்தியும் கட்சி ஆவணங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். மேற்கண்ட சமூக விரோதிகள் அலுவலகத்தை உடைத்திருக்கும் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இது குறித்து காவல் துறையினர் உரிய விசாரணை செய்து இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்திட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.