திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே பெரணமல்லூர் ஊராட்சியில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகின்றன. மேலும் பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராக வெங்கடேசன் என்பவரும் பணியாற்றி வருகின்றார். பெரணமல்லூர் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த இந்திரா இளங்கோ உள்ளிட்ட 16 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர்.
மேலும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் என்பவரின் சகோதரர் அறிவழகன்(எ) ஜவகர் என்பவர், அதிமுகவில் நகர துணைச் செயலாளராகப் பதவி வகித்து வருகின்றார். செய்யாற்றில் அதிமுக அண்ணா தொழிற் சங்க மாநிலச்செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் செயல்வீரர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது சம்மந்தமாக சில தினங்களுக்கு முன்பு பெரணமல்லூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் வரவேற்பு குறித்து போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அப்போது பெரணமல்லூர் அரசு ஒன்றிய அலுவலகம் வளாகத்திலும் போஸ்டரை ஒட்டியுள்ளார். அரசு அலுவலக வளாகத்தில் போஸ்டர் ஒட்டியதைக் கண்ட அதிகாரிகள் அரசு அலுவலங்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து மறுநாள் அரசு ஊழியர்கள் இந்த போஸ்டரை அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படையில், அலுவலக ஊழியர்கள் அலுவலக வளாக சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை அகற்றியுள்ளனர்.
இதனை அறிந்த அதிமுக நகர துணைச்செயலாளர் ஜவகர் என்பவர் ஆத்திரமடைந்து மீண்டும் மறுநாள் ஜூலை 8ஆம் தேதி அன்று மீண்டும் அதே போஸ்டரை ஒட்டியுள்ளார். பின்னர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் என்பவர், அதிமுகவைச் சேர்ந்த ஜவகர் என்பவரிடம் அரசு அலுவலங்களில் ஏன் போஸ்டர் மீண்டும் மீண்டும் ஓட்டி வருகின்றீர்கள் என போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
அதற்கு அவர் மிரட்டல் தொனியில், ''பட்டியல் இனத்தை சேர்ந்த (ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்) எவனா இருந்தாலும் வெட்டுவேன்’’ என்று மிரட்டல் விடுத்து உள்ளார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் போஸ்டரை எவனாவது தொட்டால் வெட்டுவேன் என்றும், ஒன்றிய பெருந்தலைவரை சாதியை குறிப்பிட்டும், அதிகாரியை மிரட்டும் தொனியிலும் ஜவகர் மிரட்டியுள்ளார்.
ஜவகர் போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பின்னர் இச்சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் கோவிந்தராஜ் ஆகியோர் தனிதனியாக பெரணமல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இரண்டு பேரிடமும் புகாரை பெற்ற பெரணமல்லூர் போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அதிகாரிகள், ஒன்றிய பெருந்தலைவருக்கு மிரட்டல் விடுத்து விட்டு தலைமறைவான அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகனின் சகோதரர் ஜவகரை, போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ ஐய்யப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு!