திருவள்ளூர்: கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் உணவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக புகார் புத்தகம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்ற திட்டத்தை நிதி நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அறிவிப்பார். பொதுமக்களிடம் நியாய விலைக்கடை ஊழியர்கள் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும்.
நியாய விலைக்கடைகளில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஆந்திராவில் இருந்து நெல்மூட்டைகளை ஏற்றி வரும் வாகனங்களை திருவள்ளூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என துறை அலுவலர்களுக்கு வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.
பின்னர் காக்களூர் நியாய விலைக்கடையில் அவர் ஆய்வு செய்ததோடு, பூண்டி ஒன்றியம் டுமோர், வர்தாபுரம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களையும் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: ’போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்து ஓபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது’ - அமைச்சர் சாடல்