ETV Bharat / state

வெள்ளியைத் திருடி குறைவான விலைக்கு விற்ற நகைக்கடை ஊழியர் கைது

author img

By

Published : Jan 5, 2023, 5:40 PM IST

வாணியம்பாடியில் 35 கிலோ வெள்ளி நகைகளை திருடி கடையின் வெள்ளி நகை விற்பனை மேலாளர் ரியாஸ் பாஷா மற்றும் ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளியை திருடி குறைவான விலைக்கு விற்ற நகைக்கடை ஊழியர் கைது
வெள்ளியை திருடி குறைவான விலைக்கு விற்ற நகைக்கடை ஊழியர் கைது

வெள்ளியைத் திருடி குறைவான விலைக்கு விற்ற நகைக்கடை ஊழியர் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடி பூக்கடை பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர், எல்.எஸ்.கே ரமேஷ். இவருக்குச் சொந்தமான மற்றொரு நகைக் நகைக்கடை சி.எல்.சாலையில் உள்ளது. அந்தக் கடையை அவரது மகன் L.R.விஜய் ராவ் கவனித்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு வாணியம்பாடி நியூடெல்லி பகுதியைச் சேர்ந்த ரியாஸ் பாஷா(28) என்பவர் பூக்கடை பஜார் பகுதியில் உள்ள கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் அங்கே வேலை செய்த பின்னர் சி.எல்.சாலையில் உள்ள கடைக்கு வெள்ளி நகை விற்பனை மேலாளராகப் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் சி.எல். சாலையில் உள்ள நகைக்கடையில் கணக்கு சரி பார்த்தபோது வெள்ளி நகைகள் கணக்கில் குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிசிடிவியில் சிக்கிய ஊழியர்: தொடர்ந்து சிசிடிவி பதிவு காட்சிகள் பார்த்தபோது வெள்ளி நகை விற்பனை மேலாளர் ரியாஸ் பாஷா என்பவர், அவ்வப்போது வெள்ளி நகைகளை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து வெள்ளி நகை இருப்பு கணக்கு சரி பார்க்கப்பட்டது. அதில், சுமார் 35 கிலோ வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய ராவ், நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியாஸ் பாஷா என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கடந்த ஓராண்டாக கடையில் இருந்து வெள்ளி நகைகளைத் திருடிச் சென்று பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் விற்றதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த ஷபீனா (29) என்ற பெண் உதவியுடன் நகைகளை அடமானம் வைத்தும் மற்றும் விற்றும் வந்ததாகவும் தெரிகிறது. அந்த நகைகள் விற்று வந்த பணத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு உதவி மற்றும் கடன் கொடுத்ததாக ரியாஸ் பாஷா ஒப்புக்கொண்டார்.

குறைந்த விலையில் நகை வாங்கியவர்கள் அச்சம்: போலீசார் ரியாஸ் பாஷாவை வெள்ளி நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல் நியூடெல்லி பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து அவரிடம் குறைந்த விலையில் நகைகள் வாங்கிய பெண்கள் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் நகைகள் ஒப்படைத்தனர். மேலும் அடமானம் வைத்திருந்த நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெள்ளி நகைத் திருட்டு வழக்கில் ரியாஸ் பாஷா மற்றும் நகைகள் அடமானம் வைக்கவும்,விற்கவும் உதவிய பெண் ஷபினா(29) ஆகியோரை கைது செய்தும், அவர்களிடம் இருந்து 8.5 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த பின்னர் அவர்களை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

கடந்த மாதம் ரியாஸ் பாஷா நிச்சயதார்த்தம் நடைபெற்று அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளை நகை திருட்டு வழக்கில் சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடைய பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு விவகாரம்: இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.