ETV Bharat / state

நெல்லை மேயராக பி.எம். சரவணன் தேர்வு

author img

By

Published : Mar 4, 2022, 12:56 PM IST

திருநெல்வேலியில் மேயர் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், திமுக தலைமை அறிவித்த பி.எம். சரவணன் மாநகராட்சியின் 6ஆவது மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

நெல்லையில் சுமுகமாக நடந்த மேயர் தேர்தல்
நெல்லையில் சுமுகமாக நடந்த மேயர் தேர்தல்

திருநெல்வேலி: மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று (மார்ச் 04) மாநகராட்சி ராஜாஜி மஹாலில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.எம். சரவணன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலி மாநகராட்சி பொருத்தவரை மொத்தம் 55 வார்டுகளில் திமுக கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் திமுகவில் இணைந்ததால் நெல்லை மாநகராட்சியில் திமுகவின் பலம் 51ஆக உயர்ந்தது.

அதிமுக நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இன்று நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளர பி.எம். சரவணன் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு எந்த உறுப்பினரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பி.எம். சரவணன் போட்டியின்றி நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் விஷ்ணு சந்திரன் அறிவித்தார்.

சரவணன் மாநகராட்சியின் 16ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலும், நெல்லை மாநகராட்சியின் ஆறாவது மேயராக பி.எம். சரவணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பி.எம். சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “மேயராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு வாக்களித்த அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நெல்லையில் பி.எம். சரவணன் மேயராக தேர்வு

நெல்லை மாநகராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பான முறையில் செய்து கொடுப்பேன். குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

மேயர் தேர்தலை தொடர்ந்து இன்று பிற்பகல் துணை மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. துணை மேயராக திமுக சார்பில் ராஜு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நெல்லை மாநகராட்சியில் 1ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனிடையே மேயர் தேர்தல் முடிந்த பிறகும் திமுக கவுன்சிலர்கள் வழக்கம் போல் இன்றும் டெம்போ வேன்களில் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு எதிராக வாக்களித்து விடக் கூடாது என்ற அச்சத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு திமுகவைச் சேர்ந்த 38 கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் ஏற்பாட்டின் பேரில் இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற கவுன்சிலர் பதவியேற்பு விழாவின்போது அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு கவுன்சிலர் பதவி ஏற்பு விழா முடிந்த கையோடு மீண்டும் மனிதச்சங்கிலி பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து இன்றும் அவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு மேயர் தேர்தலில் வாக்களித்த பிறகு மீண்டும் வாகனங்களில் அழைத்துச் சென்று நெல்லை வண்ணாரப்பேட்டை அருகேவுள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பிற்பகல் நடைபெறும் துணை மேயர் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக அவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.

இதையும் படிங்க: மறைமுக தேர்தல் முடிவுகள் : சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டு கால வரலாற்றில், இது ஒரு மைல்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.