ETV Bharat / state

டாணாக்காரன் திரைப்படத்தை நினைவுகூர வைத்த சம்பவம்: உற்சாகத்தில் மணிமுத்தாறு பட்டாலியன்

author img

By

Published : Oct 20, 2022, 12:38 PM IST

நெல்லை மணிமுத்தாறு பட்டாலியனில் பயிற்சி முடித்த மகிழ்ச்சியில் சினிமா பாடலுக்கு துள்ளி குதித்து ஆட்டம் போட்ட காவலர்கள் வீடியோ வைரலாகிறது.

Etv Bharat
Etv Bharat

நெல்லை: தமிழ்நாடு காவல்துறை மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி பெற்று வந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கு நேற்று பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

அந்த வகையில் நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு பட்டாலியனில் கடந்த ஏழு மாதங்களாகப் பயிற்சி பெற்று வந்த 295 காவலர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் காவலர்கள் உயர் அலுவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் மணிமுத்தாறு பட்டாலியன் பயிற்சி நிறைவு விழாவின் இறுதியில் காவலர்கள் உற்சாக மிகுதியில் சினிமா பாடலை ஒலிக்கவிட்டு துள்ளிக்குதித்து ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குறிப்பாக சமீபத்தில் ஹிட் ஆன சிவகார்த்திகேயனின் 'அமுக்கு டுமுக்கு டமால் டுமில்' பாடல் நடிகர் விக்ரமின் 'அருவா மீச கொருவா பார்வை' போன்ற பாடல்களுக்கு காவலர்கள் ஆடி பாடி மகிழ்ந்தனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் காவலர் பயிற்சிப்பள்ளி இருந்தாலும்கூட மணிமுத்தாறு பட்டாலியன் என்றால் மாநில அளவில் புகழ்பெற்றதாக இருக்கிறது.

அந்த அளவுக்கு மணிமுத்தாறில் காவலர்களுக்கு பயிற்சிகள் மிக கடுமையாக வழங்கப்படும். குறிப்பாக பிற பயிற்சி பள்ளிகளை காட்டிலும் இங்கு அதிக கட்டுப்பாடுகள் மற்றும் அதிக ஒழுங்கு நடவடிக்கைகள் கையாளப்படுகிறது. பயிற்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் காவலர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

டாணாக்காரன் திரைப்படத்தை நினைவுகூர வைத்த சம்பவம்: உற்சாகத்தில் மணிமுத்தாறு பட்டாலியன்

சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ’டாணாக்காரன்’ திரைப்படம் மணிமுத்தாறு காவலர் பயிற்சிப் பள்ளியை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகத்தெரிகிறது. அந்தப்படத்தில் பயிற்சி கடுமையானதாக இருப்பதோடு காவலர்களுக்கு சில கொடுமைகள் நடப்பதாகவும் சுட்டிக்காட்டியிருப்பார்கள்.

பயிற்சி கடுமையானதாக இருந்தாலும் நான் மணிமுத்தாறு பட்டாலியனில் பயிற்சி பெற்றவன் என்ற பெருமை காவலர்களுக்கு சொந்தமாகிறது. எனவே, தற்போது பயிற்சி முடித்துள்ள காவலர்கள் ஏழு மாதங்களில் குடும்பத்தினரை, நண்பர்களைப் பிரிந்து மிகக் கடுமையான கட்டுப்பாட்டுடன் பயிற்சியை நிறைவு செய்திருப்பது, அவர்களின் இந்த கொண்டாட்டத்தை வைத்து அறிந்து கொள்ள முடிகிறது.

இதையும் படிங்க: சென்னையில் புதிய போக்குவரத்து விதி நள்ளிரவு முதல் அமல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.