ETV Bharat / state

நாங்குநேரியில் மேலும் ஒரு சம்பவம் - வீட்டின் மீது பெட்ரொல் குண்டு வீச்சு!

author img

By

Published : Aug 13, 2023, 10:09 AM IST

நாங்குநேரி அருகே நம்பி நகரில் முன்பகை காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

petrol bomb
வீட்டின் மீது பெட்ரொல் குண்டு வீச்சு

வீட்டின் மீது பெட்ரொல் குண்டு வீச்சு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நம்பி நகரைச் சேர்ந்த கண்ணன் என்ற கபாலி கண்ணன் (52), அதே ஊரைச் சார்ந்த வானுமாமலை (62) என்பவரை நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வைத்து அரிவாளால் வெட்டி உள்ளார்.

இது தொடர்பாக நாங்குநேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக, ஜூலை 31ஆம் தேதி அதே ஊரைச் சார்ந்த 9 நபர்கள் ஒன்றாக சேர்ந்து நம்பி நகரில் உள்ள கபாலி கண்ணனின் தோட்டத்தில் இருந்த வேலிக் கற்களை உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாகவும், நாங்குநேரி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பழி வாங்கும் நோக்கமாக கபாலி கண்ணனின் மகன் நவீன்(23) மற்றும் அவரது 6 நண்பர்கள் நேற்று (ஆகஸ்ட் 12) மாலை நம்பி நகரில் உள்ள வானுமாமலையின் வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எரிந்துள்ளனர். இதில் வீட்டிலிருந்த ஷோபா மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவை நொறுங்கி உள்ளது.

மேலும் இது குறித்து நாங்குநேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நாங்குநேரியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் முன்னதாக நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி - அம்பிகாவதி தம்பதியின் மகனை, கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது அதனைத் தடுக்கச் சென்ற அவரது சகோதரியையும் வெட்டி உள்ளனர்.

இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பள்ளியில் ஏற்பட்ட சாதி ரீதியான பிரச்னை காரணமாக, பள்ளியில் பயின்ற சக மாணவர்கள்தான் வீடு புகுந்து வெட்டியது என்பது தெரிய வந்து உள்ளது.

மேலும், வெட்டுபட்ட மாணவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இந்த மாணவரை மாற்று சமூக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், மாணவனின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுச் சமூக மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

எனவே, இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முதல் திரைப்பட நடிகர்கள் வரை பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாங்குநேரி சம்பவம்: "தைரியமாக இருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்"- முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.