ETV Bharat / state

2 ஆண்டுகளாக செயின் பறித்தவரைக் கண்டுபிடிக்க முடியல..! வள்ளியூர் போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 5:25 PM IST

petition filed by the Vallioor police in the Vallioor criminal court was dismissed
வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வள்ளியூர் போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது

Vallioor Police Petition: நெல்லை நகை பறிப்பு விவகாரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வள்ளியூர் காவல்துறை தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம், மீண்டும் திருடனைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது.

வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வள்ளியூர் போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது

திருநெல்வேலி: தங்கச்சங்கிலி பறிப்பு விவகாரத்தில், திருடியவரின் முகம் சிசிடிவி காட்சியில் தெளிவாகப் பதிவாகி இருந்தும், 2 ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என வள்ளியூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனுத்தாக்கல் செய்ததை ஏற்க மறுத்த நீதிமன்றம், மீண்டும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த கருத்தப் பிள்ளையூரைச் சேர்ந்தவர் ஆசிரியை ஜோஸ்பின் ராணி (45). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி, வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தில் திருவிழாவிற்காகத் தனது தந்தையார் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர், வீட்டு வாசலின் முன்பு தனது உறவினருடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், திடீரென முகவரி கேட்பது போல் நடித்து ஆசிரியை ஜோஸ்பின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துத் தப்பி ஓடியுள்ளார். இதன் மதிப்பு சுமார் மூன்றரை லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த வழிப்பறி சம்பவம் அருகில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து, வள்ளியூர் காவல் நிலையத்தில் ஆசிரியை ஜோஸ்வின் ராணி புகார் அளித்ததன் பேரில், சிசிடிவி காட்சிகள் மூலம் வள்ளியூர் காவல்துறை விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழிப்பறி செய்த திருடனைக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், கடந்த வாரம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வள்ளியூர் காவல் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தங்கச் சங்கிலியைத் திருடியவர் யார் என தெரியவில்லை எனவும், திருடு போன நகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் இந்த வழக்கை விசாரித்தார்.

அப்போது நீதிபதி, காவல்துறையின் மனுவைத் தள்ளுபடி செய்து, காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் மீண்டும் ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து, திருடிய நபரைக் கண்டுபிடித்து கைது செய்யவும், களவு போன தங்கச் சங்கிலியை விரைவாகக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் எனவும், வள்ளியூர் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிசிடிவி காட்சியில் திருடனின் முகம் தெளிவாகப் பதிவாகி இருந்தும், திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததை ஏற்று கொள்ளாத நீதிபதி மீண்டும் திருடனைக் கண்டுபிடித்துத் தர உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய வழக்கு... டிச.19-க்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.