ETV Bharat / state

கார் சாகுபடி செய்ய முடியாமல் தவித்த நெல்லை விவசாயிகள்; நீண்ட தாமதத்திற்குப் பிறகு அணைகளில் நீர் திறந்த அரசு!

author img

By

Published : Jul 19, 2023, 6:46 PM IST

கார் சாகுபடிக்காக பாபநாசம், காரையாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

கார் சாகுபடி செய்ய முடியாமல் தவித்த நெல்லை விவசாயிகள்; நீண்ட தாமதத்திற்குப் பிறகு அணைகளில் நீர் திறந்த அரசு!

நெல்லை: கார் மற்றும் பிசான சாகுபடியின்கீழ் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய பிரதான அணைகளை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. மேற்கண்ட அணைகளை நம்பி சுமார் 86,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

விவசாய நிலங்களுக்கு மட்டுமல்லாமல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் மேற்கண்ட அணைகள் இருந்து வருகின்றன. அணைகளைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழையைவிட வடகிழக்குப் பருவமழையின்போது தான், நெல்லை மாவட்டத்திற்கு அதிக மழை கிடைக்கும். எனவே, அந்த சமயங்களில் அணை முழுவதும் நிரம்பும்.

ஆனால், சமீப காலமாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால், அதன் பருவ காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அணைகளில் தண்ணீர் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும் பெய்ததால் நெல்லை மாவட்ட அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பாபநாசம், மணிமுத்தாறு போன்ற அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வறண்டு காணப்பட்டது.

குறிப்பாக 143 அடி கொள்ளளவு கொண்ட மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை கோடை காலத்தில் 20 அடி கொள்ளளவாக குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம், தென்மேற்குப் பருவமழைத் தொடங்கியதால் பருவமழை கை கொடுக்கும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ஆண்டும் தற்போது வரை தென்மேற்குப் பருவமழை போதிய அளவு மழையை கொடுக்காததால், தற்போது வரை அணையில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது.

இதனால் ஜூன் முதல் வாரத்தில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று நாட்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக, பாபநாசம் உட்பட அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. எனவே, நிலைமையைக் கருத்தில் கொண்டு அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இதுபோன்ற நிலையில் விவசாயிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இன்று நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், காரையாறு அணையில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது இன்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.90 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 472 கன அடியாகவும் உள்ளது.

இதனால் சுமார் ஒன்றரை மாதத்திற்கு மேலாக கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்காத நிலையில் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் சபாநாயகர் அப்பாவு இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட்டார்.

இதன் மூலம் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் பகுதிகளின் மூலம் மொத்தம் 18,090 ஏக்கர் நேரடி, மற்றும் மறைமுகமாக பாசனம் பெறும் என்றும், 105 நாட்களுக்கு தண்ணீரின் இருப்பைப் பொறுத்து சுழற்சி முறையில் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ''தற்போது காரையார் அணையில் 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறுகிய கால பயிரை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு விவசாயத்திற்கு கடனுதவியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க: நெல்லையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு: திமுக பிரமுகர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.