ETV Bharat / state

ஊராட்சி நிதி கையாடல் விவகாரம்: தேர்தல் நடத்தும் அலுவலர் இடமாற்றம்!

author img

By

Published : Oct 3, 2021, 3:14 PM IST

திருநெல்வேலி: நிதி மோசடி விவகாரத்தில் ஊராட்சி செயலர் முன்னதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரை திடீர் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நிதி மோசடி
நிதி மோசடி

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி செயலர் பாலசுப்பரமணியன், ஊராட்சி நிதியை கையாடல் சைய்த விவகாரத்தில், நேற்று (அக்.02) இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நிதி மோசடி செய்த ஊராட்சி அலுவலர்

இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மூன்று பேருக்கு அவர்களுக்குத் தெரிவிக்காமலேயே திடீரென 17 லட்சம் ரூபாயை ஊராட்சிப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தி, அவசர அவசரமாக அப்பணத்தை இரண்டு நபர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி, அதைக் கையாடல் செய்ய முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் நெல்லை மாவட்டத் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம்

இந்தச் சூழ்நிலையில் இன்று (அக்.03) திடீரென ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லயொலா ஜோசப் ஆரோக்யதாசும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் நிதி மோசடி விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் லயோலா ஜோசப் ஆரோக்ய தாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஊராட்சிகளுக்கு தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் ஊராட்சி நிதிக்கான காசோலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் கையெழுத்திட வேண்டும். எனவே பாலசுப்பிரமணியன் விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மோசடியாகக் கையெழுத்து போட்டதாகக் கூறப்படுகிறது. எனவே வட்டார வளர்ச்சி அலுவலரை பணி இடமாறுதல் செய்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச சுடலைமுத்து, ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (லயோலா ஜோசப் ஆரோக்ய தாஸ்சுக்கு பதில்) மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சங்கரன், ராதாபுரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாறுதல் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிதி மோசடி
மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பஞ்சாயத்துக்களில் நடைபெறும் நிதி மோசடியில் அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நேரடியாக நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜாதி பார்த்து வாக்களிக்க வேண்டாம் - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.