மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரம் பகுதியைச் சோந்தவர் நாகு என்ற நாகேந்திரன் (48). இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் ஆகிய தொழில்கள் செய்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த நவம்பர் 20ஆம் தேதி மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையோரம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, கொலை நடந்த 24 மணிநேரத்திற்குள் கொலை குற்றவாளிகளான மதுரையைச் சேர்ந்த உமாசங்கர் (48), உசிலம்பட்டி அருகேவுள்ள அன்னமார்பட்டியைச் சேர்ந்த சாய்பிரசாத் (40), விக்கிரமங்கலம் அருகேவுள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்பாண்டியன் (40) ஆகிய மூன்று பேரை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூவரும் கூலிப்படையினர் என்றும் முன்விரோதம் காரணமாக நாகேந்திரனை கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்கள் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, தேனி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்ற ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூலிப்படையினர் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் மூவரையும் காவல் துறையினர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆறுகளை மாசுப்படுத்தினால் குண்டர் சட்டத்தில் கைதா?