ETV Bharat / state

தேனியில் அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு - பதவி உயர்வு பறிபோனதால் ஆத்திரம்!

author img

By

Published : May 30, 2022, 6:13 PM IST

தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்ததால் பதவி உயர்வு கிடைக்காமல் போன ஆத்திரத்தில் மாவட்ட திட்ட அலுவலரை, சக அரசு அலுவலர் அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு
அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் மாவட்ட பல்துறை பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் தேனி மாவட்ட ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர், ராஜராஜேஸ்வரி. இவர் இன்று (மே 30) அலுவகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது இந்த அலுவலகத்தில் முன்பு பணியாற்றி தற்போது திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் பணிபுரிந்து வந்த உமாசங்கர் என்பவர், ராஜராஜேஸ்வரியை சந்திக்க அவரது அறைக்குள் சென்றார்.

அப்போது ராஜராஜேஸ்வரியிடம் பேசிக்கொண்டிருந்த உமாசங்கர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜராஜேஸ்வரியை கை, தலை, முகம் ஆகிய இடங்களில் சரமாரியாக அடுத்தடுத்து வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜராஜேஸ்வரி அலறத்தொடங்கினார். இதனைக் கண்ட மற்ற ஊழியர்கள் உமாசங்கரை வளைத்து பிடித்து அங்கிருந்த அறையில் வைத்து பூட்டினர்.

பின்னர் உடனடியாக ராஜராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த உமாசங்கரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2013-2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் ராஜராஜேஸ்வரி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலராகப் பணிபுரிந்த நிலையில் உமாசங்கர், அவரிடம் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு

உமா சங்கரை சஸ்பெண்ட் மற்றும் சார்ஜ் சீட் பதிவு செய்ததாகவும், மேலும் அவரை திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் போனதால் ஆத்திரத்தில் ராஜராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ராஜராஜேஸ்வரியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அண்ணியை தகாத வார்த்தையால் திட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.