ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு...! சபரிமலை செல்ல ஏதுவாக தேனியில் போக்குவரத்து மாற்றம்!

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு...! சபரிமலை செல்ல ஏதுவாக தேனியில் போக்குவரத்து மாற்றம்!
சபரிமலை சீசன் தொடங்கி இருப்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேனி: கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பசுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு, ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதியில் இருந்து, தை மாதம் நடைபெறும் மகரஜோதி வரை, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம்.
-
சபரிமலை சீசனை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்! #etvbharat #etvbharattamil #sabarimala #sabarimaladharsan #theni pic.twitter.com/CLtTBPlQYf
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 18, 2023
மாலையிட்டு, தொடர்ந்து 48 நாட்களுக்கு விரதம் மேற்கொண்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். தென்தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக அதிகளவிலான வாகனங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவார்கள். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாவும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று வருவதற்கும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்த செய்திக்குறிப்பில், "வருகின்ற 20.11.2023 ஆம் தேதி முதல் கம்பம் மெட்டு சாலை வழியாக சபரிமலை செல்வதற்கு ஒரு வழித்தடமாகவும், சபரிமலை தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் பக்தர்களின் வசதிக்காக குமுளி வழி சாலையை ஒரு வழித்தடமாக போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்கு கம்பம் மெட்டு வழித்தடத்தையும், திரும்புவதற்கு குமுளி வழித்தடத்தையும் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது" என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
