ETV Bharat / state

நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்; வழக்கு பதிவு செய்யாமல் போலீஸ் அலட்சியம்

author img

By

Published : Mar 2, 2023, 10:05 AM IST

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் 3 பேரை பழங்குடியின மலைவாழ் மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லான் காலனி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடி இன மலைவாழ் மக்கள் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மலைவாழ் மக்கள் தங்கத்தால் ஆபரணங்கள் செய்து போட முடியாத நிலையில், அவர்கள் தோட்ட வேலைக்குச் சென்று சிறிது சிறிதாக சேர்த்து காலில் வெள்ளி கொலுசு மட்டுமே அணிவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் ஷா, முகேஷ் குமார், அம்ரித் யாதவ் ஆகிய 3 வடமாநில இளைஞர்கள், கிராமத்தில் வீடுகளில் இருந்த பெண்களிடம் காலில் அணிந்துள்ள கொலுசுகளை பாலிஷ் செய்யும் பவுடர் உள்ளது. அந்த பவுடர் வெறும் 20 ரூபாய் தான் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று முதலில் கூறி பெண்களிடம் பேசி மோசடியை துவக்கி உள்ளனர்.

பெண்கள் அதை வாங்கிக் கொள்ள முன்வராத நிலையில் நானே உங்களுக்கு பாலிஷ் போட்டு காட்டுகிறேன் என்று கூறி வலுக்கட்டாயமாக லட்சுமி என்ற பெண் அணிந்திருந்த கொலுசை வடமாநில இளைஞர் கழற்றி, அவர்கள் வைத்திருந்த பவுடரை தடவி வேதிப்பொருட்கள் நீரில் மூழ்கடித்துள்ளனர்.

அப்போது கொலுசை மூழ்கடித்த நீரானது கொதிக்கத் தொடங்கிய நிலையில் மீண்டும் எடுத்த போது அந்த கொலுசு முழுவதும் கருப்படைந்ததாகவும், அதனை மீண்டும் சீயக்காய் பவுடரை போட்டு தேய்த்து நீரில் கழுவி கொடுத்துள்ளனர். பாலிஷ் செய்த கொலுசை பெண்களிடம் கொடுக்கும் போது தற்பொழுது போட வேண்டாம் ஒரு மணி நேரம் கழித்து அணிந்து கொள்ளுங்கள் என கூறி அடுத்தடுத்து மூன்று பெண்களின் கொலுசுகளை இதே போன்ற முறையில் பாலிஷ் செய்து கொடுத்துள்ளனர்.

வடமாநிலத்து இளைஞர்கள் பாலிஷ் செய்து கொடுத்த கொலுசுகள் சிறிது நேரத்தில் தனித்தனியே கழன்று விழத் தொடங்கியது. இதில் என்னவென்றால் ஒரு மாதத்திற்கு முன்பாக வாங்கிய புது கொலுசும் அதே நிலைக்கு ஏற்பட்டவுடன் பழங்குடி இன மலைவாழ் பெண்கள் அதிர்ந்து போய் சுதாரிக்க தொடங்கியுள்ளனர்.

வட மாநிலத்து இளைஞர் ஒருவரின் பையைப் பிடுங்கி வைத்த நிலையில் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளனர். அந்த நேரத்தில் எதிரே வந்த பழங்குடியின மலைவாழ் மக்களின் இளைஞர்கள் மூவரையும் விரட்டி பிடித்து கொலுசுகள் அனைத்தும் தனித்தனியாக துண்டாகி உள்ளது குறித்து கேட்டபோது நீங்கள் கொடுத்த கொலுசு பழசு, அதனால் அப்படித்தான் இருக்கும் என்று முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட பழங்குடியின மலைவாழ் மக்கள் மூன்று வட மாநில இளைஞர்களையும் பிடித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொலுசுகளை பாலிஷ் போட்டு தருவதாக கூறி செய்த மோசடியை காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் பழங்குடியின மலைவாழ் மக்கள் பிடித்துக் கொடுத்த வடமாநில இளைஞர்களை விசாரணை செய்த போது அவர்கள் இதுபோன்று மோசடியில் தொடர்ந்து ஈடுபடுவதும், அவர்கள் திண்டுக்கல் பகுதியில் குடியிருந்து பல்வேறு இடங்களில் இது போன்று சிறிய கிராமங்களில் நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறி மோசடி செய்வதும் தெரியவந்தது.

இதனிடையே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் பழங்குடியின மக்களிடம் நீங்கள் புகார் கொடுத்தால் அந்த மூன்று கொலுசுகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் தயாரா என காவல்துறையினர் கேட்டதாகவும், சிறுக சிறுக சேர்த்து வாங்கிய கொலுசு பறிபோகி விடுமோ என்ற அச்சத்தில் புகார் கொடுக்காமல் திரும்பி வந்ததாக பழங்குடியின மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல், பழங்குடியின மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் வடமாநில கும்பலை விடுவித்துள்ளனர். இது போன்ற மோசடியில் ஈடுபடும் வடமாநில இளைஞர்களை உரிய விசாரணை மேற்கொள்ளாமல் காவல்துறையினர் விடுவது ஏடிஎம் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: கேஸ் குடு பாத்துக்கலாம்.! துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.