ETV Bharat / state

மகளிர் உரிமைத் தொகை: இணையதள சேவை முடக்கம் பொதுமக்கள் அவதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 2:20 PM IST

தேனியில் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாவதாக பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

magalir-urimai-thogai-internet-service-down
மகளிர் உரிமைத் தொகை: இணையதள சேவை முடக்கம் பொதுமக்கள் அவதி

தேனி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 18ஆம் தேதி அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை துவங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனிடையே உரிமை தொகை கிடைக்காத பெண்கள், மீண்டும் தாலுகா அலுவலகங்களில் உள்ள இசேவை மையங்களில் விண்ணப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனால் நேற்று (செப். 20) முதல் தேனி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலங்களில் உள்ள இசேவை மையங்களில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இசேவை மையத்தில் இணையதள சேவை முடங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்பதற்காக வந்த பெண்கள் அனைவரும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து விண்ணப்பிக்க வந்த பாக்கியலட்சுமி கூறுகையில், "எங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கப் பெறவில்லை. ஏன் என கேட்டபோது, எங்களுடைய குடுப்ப அட்டை கவர்மெண்ட் ஸ்டாப் கார்டு என கூறுகிறார்கள். நானும் என் கணவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் எப்படி இது போன்று கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. மீண்டும் மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்க கடந்த 3 நாள்களாக வந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் சர்வர் பிஸி என்று சொல்லி எங்களை அலைக்கழித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து விண்ணப்பிக்க வந்த சில பொதுமக்கள் கூறுகையில், "வசதி வாய்ப்பு உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கி உள்ளனர். கூலி வேலை செய்யும் எங்களை பேன்ற பெண்களுக்கு வழங்காமல் உள்ளனர். இதனை தமிழக முதலமைச்சர் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து கூலி வேலை செய்யும் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இசேவை மையத்தில் உள்ள இணையதள சேவை முடக்கத்தை தமிழக அரசு சீர் செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: செல்போனிற்கு சைரன் ஒலியுடன் வந்து அவசர எச்சரிக்கை! மக்களே பயப்பட தேவையில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.