ETV Bharat / state

திருமணம் மீறிய உறவு விவகாரம்; தகராறை தடுக்கச் சென்றவர் கத்திக்குத்தில் பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 2:42 PM IST

திருமணம் மீறிய உறவு விவகாரத்தில் இரு நபர்களுக்குள் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்றவர் பலியான சம்பவம் போடி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

in theni Disputes due to extramarital affairs person stabbed to death who try to stop the fight
திருமணம் மீறிய உறவு விவகாரம்; தகராறை தடுக்கச் சென்றவர் கத்திக்குத்தில் பலி!

தேனி: போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜா (33). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். அவரது அண்ணன் மருதமுத்து (36). மருதமுத்துவின் மனைவி வீரலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் (24) என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததால் மருதமுத்து குடும்பத்தாருக்கும், பிரவீன் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி உள்ளனர்.

இருந்த போதும் வீரலட்சுமிக்கு பிரவீனுக்கும் இடையே இருந்த திருமணம் மீறிய உறவு தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மருதமுத்து, பிரவீனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுடன், உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டொம்புச்சேரி சமுதாயக்கூடம் அருகே இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மருதுமுத்து கத்தியால் பிரவீனை குத்த முன்றுள்ளார். இதனை மருதமுத்துவின் தம்பி ராஜா தடுத்துள்ளார். இந்த நிலையில் அருகில் உள்ள தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த பிரவீன், மருதமுத்துவை குத்த முயன்றுள்ளார். அவருக்கு ஆதரவாக பிரவீனின் மைத்துனர் தினேஷ்குமார் (26) என்பவரும் மருதமுத்துவை குத்த முன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக இதனை தடுக்க வந்த ராஜாவை இருவரும் சரமாரியாக குத்தினர். இதில் கழுத்து மற்றும் விலா பகுதியில் சரமாரியாக குத்தப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து பிரவீன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினர்.

படுகாயம் அடைந்த ராஜாவை உறவினர்கள் மீட்டு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ராஜாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்ததும், அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மருதமுத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான தினேஷ்குமார் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

உயிரிழந்த ராஜாவின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. திருமணம் மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறை விலக்கச் சென்ற இளைஞர் கத்திக்குத்து பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் போலீஸ் தற்கொலை முயற்சி.. வரதட்சணை கொடுமை என பெண் போலீஸ் புகார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.