நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46.5 கிலோ மீட்டர் துாரம் கொண்டது மலை ரயில். இந்த மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள அழகிய இயற்கை எழிலையும், வனப்பகுதியில் உலாவும் காட்டு விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.
மலைப்பாதை தண்டவாளத்தில் பல் சக்கரம் மூலம் ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக செல்லும் இந்தத் தண்டவாளத்தில் ரயிலில் பயணம் செய்வது சுவையான அனுபவம். இதை ரசிக்கவே சுற்றுலா பயணிகள் மலை ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஆசியாவிலேயே உதகை மலை ரயிலில்தான் பல் சக்கர தண்டவாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இன்றி கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ரயில்வே நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
எனினும் குன்னூரில் உள்ள பணிமனையில் ரயில் இன்ஜின்கள் பராமரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்த நிலையில் இன்று (டிச. 05) முதல் முதல்முறையாக, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை தனியார் மலை ரயில் இயக்கம் தொடங்கியது. இது வாரத்தில் சனி, ஞாயிறு தினங்களில் இயக்கப்பட உள்ளது.
சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கட்டணமாக ரூபாய் 3 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பணி பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகம் முன்பதிவுடன் மலை ரயில் இயக்காத நிலையில் இந்தத் தனியார் ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: கோவை விமான நிலையத்தில் கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்!