ETV Bharat / state

நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கு பிரத்யேக கூட்டம் - அமைச்சர் மா.சு தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 11:29 AM IST

Prevention of Nipah and Dengue: டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பிரத்தியேகக் கூட்டம் சென்னையில் செப்.16 ஆம் தேதி நடத்தப்படும் என சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Prevention of Nipah and Dengue
டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரத்தியேகக் கூட்டம்

Minister Ma Subramanian Byte

நீலகிரி : உதகை அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிக்கல் செல் அனீமியா ஸ்கிரீனிங் ப்ரோக்ராம் சென்டரை தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அங்கு நடைபெற்ற இரத்த தான முகாமினை துவக்கி வைத்தும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்களுடன் உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உதகையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதிக்குள் மருத்துவமனை திறக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்து 21 காலி மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கும், ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தற்போது கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் காரணமாக 2 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு நோய் பரவாமல் இருக்க தமிழகத்தின் 6 மாவட்ட கேரளா எல்லைகளிலும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆய்வு நடத்தப்படுகிறது. முழுமையாக சோதனை செய்த பின்னரே தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். அதேபோல் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 9 மாதங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் டெங்கு காய்ச்சல் தன்மை தமிழ்நாட்டில் கட்டுக்குள் உள்ளது.

மேலும், நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பிரத்தியேக கூட்டம் வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது" என்று தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் கொசு மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.